
ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மூன்று துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய அனுமதி இன்றி முறைகேடாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இது ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள வனவிலங்குகள் அவ்வப்போது விவசாயி நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இப்பகுதியை சேர்ந்தவர்கள் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஒரு சிலர் விலை நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை வேட்டையாடும் முறைகேடான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வத்திராயிருப்பை சேர்ந்த சரவணகுமார் மற்றும் வனராஜா ஆகியோர் தங்களது வீட்டில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சரவணக்குமார், வனராஜா ஆகியோரது வீடுகளை சோதனை செய்த காவல்துறையினர் சரவணகுமார் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 78 தோட்டாக்கலையும் வனராஜா வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் சரவணகுமார், வனராஜா இவர்களுக்கு உதவியாக இருந்த நிகில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் சரவணகுமார் வனராஜா ஆகியோர் வனவிலங்குகள் வேட்டைக்கு மட்டும் தான் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தினரா அல்லது இதை வைத்து வேறு ஏதும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அடிக்கடி இப்பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் நாட்டு துப்பாக்கிகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தாலும் அதிக அளவில் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திராயிருப்பில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார். இது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார்(38) என்பவர் இரவில் துப்பாக்கிகளுடன் தெரிவதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து நேற்று முன்தினம் எஸ்ஐ விஜய பிரபாகரன் என்பவர் தலைமையில் அவரது வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் 78 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் டிஎஸ்பிக்கள் சபரிநாதன் உள்ளிட்ட போலீசார் அதிகாரிகள் அவரிடம் கடந்த இரு நாட்களாக துருவித் துருவி விசாரணை செய்து வந்தனர் .
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்
கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த வனராஜ்(58) என்பவரின் வீட்டை சுற்றி வளைத்த போலீசார் நாட்டுத் துப்பாக்கியுடன் அவரை கைது செய்தனர். இவர்களுக்கு தோட்டாக்களுக்கான வெடி மருந்து சப்ளை செய்த திண்டுக்கலை சேர்ந்த நிகில்(32) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
துப்பாக்கி சப்ளை செய்த சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து துப்பாக்கியுடன் பலர் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களையும் போலீசாரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.