
ஸ்ரீவிலி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் யானை, புலி ,கரடி, மான்,மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது கோவிலாறு அணை. மலை அடிவாரப் பகுதியில் இந்த அணை அமைந்துள்ளதால் ரம்மியமான அழகை காண பொதுமக்கள் தடையை மீறி வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.