
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளது. அடிவாரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலை வாசஸ்தலமான இங்கு ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமி தினங்களும் வழிபாட்டிற்கு உரிய விசேஷ தினங்களாகும். எனவே அந்த நாட்களில் மட்டும் தலா நான்கு நாட்கள் வீதம் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக அனுமதி வழங்கப்படும்.
அதன்படி ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு ஜூலை 15-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 5,321 பேரும்,மறுநாள் ஜூலை 16 அன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் நேற்று அமாவாசையை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை கோயிலில் உள்ள சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் மற்றும் 18 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சதுரகிரியில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.