
ஆபாச மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் திமுக., கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.
திமுக., தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் சில மாதங்களுக்கு முன், பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அறுவறுக்கத்தக்க சொற்களால் தரக்குறைவாக விமர்சித்துப் பேசினார். மேலும், பாஜக., நிர்வாகி, நடிகை குஷ்பு குறித்து ஆபாசமான மொழியில் தகாத வார்த்தைகளில் பேசினார். இந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
அவர் மீது புகார்கள் பல அளிக்கப்பட்ட போதும், திமுக., அரசின் போலீசார், தங்கள் கட்சி உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க முனைந்ததைத் தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது சிறையில் இருந்து வெளிவந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு திமுக., தலைமைக்கு கடிதம் அளித்தார். அதில் மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதிக்கும்படி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் திமுக., பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் ஆபாசப் பேச்சாளரின் ஆபாசப் பேச்சுகள் தேர்தல் நேரம் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் திமுக., மேடைகளில் எதிரொலிக்கும் என சமூகத் தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.