
இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், பாஜக.,வினர், ஹிந்து உணர்வாளர்கள் பலர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பாஜக., சட்டமன்றத் தலைவரும் நெல்லை தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியபோது…
1931ல் திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, மலை முழுவதும் முருகன் கோயிலுக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்துள்ளது. 1994ல் உயர் நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் நமக்குக் கற்றுக் கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ மாற்றவோ முடியாது.
அப்துல் சமது, எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும். நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன், அப்துல் சமதும் நவாஸ் கனியும் வந்ததால் நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்துல் சமதும் நவாஸ் கனியும் திருப்பரங்குன்றம் வந்ததை, சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலாகத்தான் நான் பார்க்கிறேன். மலை மேல் முன்பு அசைவம் சமைத்தது கிடையவே கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன்பு என்ன பழக்கம் இருந்ததோ அதைக் கடைபிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள், இது எங்கள் மலை, எங்களுக்குச் சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்வது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும்” என்றார்.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கூறியபோது…
“திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் மலையில் குரங்குகள் அதிகம் உள்ளன. அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்காததால் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை பறிக்கின்றன. அவைகளுக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
இதனிடையே,, திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப்பெருமானுக்கு தான் சொந்தம்” என ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,
திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப் பெருமானுக்குத் தான் சொந்தம். சுல்தான் ஆட்சியில் அடக்கம் செய்ததை வைத்துக் கொண்டு எஸ்டிபிஐ., உள்ளிட்ட அமைப்புகள் மதக் கலவரத்தைத் துாண்டும் வகையில் செயல்படுகின்றன. அமைச்சர் சேகர்பாபு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் யோசிக்க வேண்டும். இரும்புக் காலத்திற்கு முன்பே எங்கள் முருகப்பெருமான் வந்து விட்டார். வள்ளலாரையும், வள்ளுவரையும் தி.மு.க., ஆக்கிரமிக்க நினைக்கிறது… என்று கூறினார்.