ரஜினியை பாஜக இயக்குவதாகவும், ரஜினி பின்னால் பாஜக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ரஜினி ஒரு தமிழர் இல்லை என்பதும், ரஜினி பாஜக ஆதரவாளர் என்பதையும் தவிர அவர் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் இதனையே பிரதானமாக எடுத்துள்ளது. மேலும் கமல் உள்பட மற்ற நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவது கடினம், ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் இப்போது இருக்கும் பல கட்சிகள் ஆட்டம் கண்டுவிடும் என்பதாலே ரஜினிக்கு அதிக எதிர்ப்பு இருந்து வருகிறது
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து தமிழருவி மணியன் கூறியதாவது: ஒரு கட்சியைத் தொடங்கிவிட்டு என்ன செய்வதென்று யோசிக்காமல், தான் என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அதன்படி கட்சியைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. தினமும் உயர்மட்ட அளவில் பல வல்லுநர்களை இதுதொடர்பாக ரஜினி சந்திக்கிறார்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகச் சீரிய பார்வை அவரிடம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் கருத்து கூறிக்கொண்டிருக்காமல், எதற்கு முக்கியத்துவம் அளித்துப் பேசவேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால் செய்தியாளர்கள் சந்திப்பில்கூட எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் மனதில் பட்டதைத்தான் பேசுகிறார்.
எம்.ஜி.ஆர் போல ஆட்சி தரவேண்டும் என்று சொன்னாலும் அவர் காமராசர் ஆட்சியைதான் மீட்டெடுத்து வர விரும்புகிறார். இத்தனை நாள்களில் என்னிடம்கூட, `என்ன பேச வேண்டும்… ஏது பேசலாம்’ என்று கேட்டதில்லை. அவருக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் இருக்கிறது. அதன்படியே அவரும் நடக்கிறார். ரஜினி ஒரு சுயம்பு” என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.