காவிரி விவகாரத்தில் ரஜினி காந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் காவிரி விவகாரத்தில் வாய் திறப்பதில்லை என்றும், மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம் என்றும் ரஜினி காந்த் முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அண்மையில் சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் ஆகியவை நடைபெற்றன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டத்தை நடத்தி வரும் இளைஞர்களின் கவனம் போராட்டத்தில் இருந்து திசை திரும்பி கிரிக்கெட் பக்கம் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.
அதனால், போராட்டத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்புக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் காட்டுவதற்காக, ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று கோரினர். மேலும், ஐபிஎல் போட்டிகள் நடந்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் போட்டிகளைக் காண வந்த சென்னை அணி ரசிகர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, போலீஸாரையும் தாக்கி காயப் படுத்தினர். இந்தச் செயல்களைக் கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில், போலீஸாரை கொலைவெறியுடன் தாக்கி காயப் படுத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த எத்தனையோ லட்சம் மக்களைப் போல், தற்போது புதிதாக அரசியல் களத்தில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினி காந்தும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து, போலீஸாரை கொலை வெறியுடன் தாக்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர் குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், வன்முறையின் உச்சக்கட்டம் இது, காவலர்கள் மீது கை வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்றும் கூறியிருந்தார்.
இதனால், நாம் தமிழர் கட்சியினரின் வன்முறைகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள், நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். அந்த விமர்சனத்தின் உச்சக்கட்டமாக, ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சித்தார். பாரதிராஜாவின் கண்மூடித்தனமான தரம் தாழ்ந்த விமர்சனத்தால் கடுமையான மன வேதனை அடைந்த ரஜினிகாந்த், காவிரிப் பிரச்னை தொடர்பாக இனி எந்த விதமான கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்தாராம்.
இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!