எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இன்று முற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், வாலிபர்கள் பங்கேற்று,
சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
எஸ்.வி சேகர் காவல்துறையால் தேடப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் நடந்த விழா ஒன்றில் எஸ்.வி சேகர் கலந்து கொண்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவியில் தனது உறவினர் இருப்பதன் பின்னணியையும் பயன்படுத்தி எஸ்.வி சேகர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.