பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் (தட்கல் உட்பட) நாளை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் பிளஸ்-1 முதல்நிலை பொதுத்தேர்வின் போது, செய்முறை தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்து தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் 35-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத மாணவர்கள், உடனடி சிறப்பு துணைத்தேர்வின்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது. செய்முறை தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வில் மட்டும் பங்கேற்று, எழுத்து தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் 35 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், உடனடி சிறப்பு துணைத்தேர்வின் போது எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு ஆகிய இரண்டிலும் பங்கேற்க வேண்டும். செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், எழுத்து தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. அதிகபட்ச மதிப்பெண் 75 கொண்ட தொழிற்கல்வி செய்முறை பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்வை எழுத வேண்டும். செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
To Read in Indian languages…