18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணனின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இந்திரா பானர்ஜி சபாநாயகரின் முடிவிற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக சுந்தர் ஆகியோர் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இந்த வழக்கு 3-வது நீதிபதியான சத்யநாராயணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
நீதிபதி சத்தியநாராயணன் கடந்த ஜூலை 23-ம் தேதி வழக்கு விசாரணையைத் தொடங்கினார். அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை நிறைவு செய்தனர். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்தியநாராயணன் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 18 எம்.எல்ஏக்கள் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்ப உள்ளது. எடப்பாடி அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும் நிலைக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.