மதுரை: மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது விபச்சார தடுப்பு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு, 200 பக்கங்கள் கொண்ட இரண்டாவது குற்றப்பத்திரிகை சிபிசிஐடி போலீசாரால் இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான விசாரணை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், இன்று 200 பக்கங்கள் கொண்ட இரண்டாவது குற்றப் பத்திரிக்கையை சிபிசிஐடி டி.எஸ்.பி. கருப்பையா தலைமையிலான போலீசார் நீதிபதி திலகேஸ்வரியிடம் அளித்தனர்.
அதில் இந்த மூவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. மேலும் நிர்மலா தேவியிடம் எடுத்த குரல் மாதிரி சோதனை அறிக்கைகள், செல்போன் உரையாடல்கள் அடங்கிய விசாரணை ஆவணங்கள் அந்தக் குற்றப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப் பத்திரிகை 2வது மற்றும் இறுதிக் குற்றப் பத்திரிகை என்று கூறப்பட்டிருந்தது.