பாடலாசிரியர் வைரமுத்து மீது கல்லூரிப் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் புகார் கூறிய நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
#மீடூ எனும் ஹேஷ்டேக் இப்போது வைரலாக்கி வருகிறது. இந்திய திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டைகூறி வருகின்றனர். ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சி பாலிவுட் வந்து, இப்போது கோலிவுட்டையும் பிடித்து ஆட்டுகிறது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்தில் விழுந்துவருகின்றனர்.
ஆந்திராவின் நடிகை ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்டோர் தங்களிடம் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டிய விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள், பாடலாசியர் வைரமுத்துவும் இதில் சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏழு முறை தேசிய விருது பெற்ற வைரமுத்து மீது ஏழரையைக் கூட்டியுள்ளது #MeToo வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் தெரிவித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் சந்தியா மேனன் பதிவிட்ட விவகாரம் தமிழ் திரையுலகில் புயலை கிளப்பியது.
பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக சந்தியா மேனன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டது…
“எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென என்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதைத்தொடர்ந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே அந்த அறைக்குச் செல்வேன்.
வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை”
– இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டிவிட்டரில் பதிவிட்டார். மேலும், சந்தியா மேனனின் இந்தப் பதிவை பாடகி சின்மயி ஸ்ரீபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான ட்வீட்டை சந்தியா மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது… “வைரமுத்துவிடம் இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது கொண்ட அவர், என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக் கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நானும் சொல்லவில்லை.
என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் இதனை வெளியில் சொல்கிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”
இப்படி அந்தப் பதிவில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக டிவிட்டர் பதிவில் சந்தியா மேனன் கூறியுள்ளார்.
முன்னதாக கவிஞர் வைரமுத்து பெண் கடவுளான ஆண்டாள் குறித்து மிக மோசமாக பாலியல் ரீதியில் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு இந்து அமைப்புகள், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தி போர் கொடி தூக்கின. இந்நிலையில் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறியுள்ளது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது