சர்கார் படத்தின் கதையும், சென்னை எழுத்தாளர் வருண் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் கதை வேறு ஒரு கதையில் இருந்து திருடப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது.
சர்க்கார் படத்தின் கதை மற்றும் திரைக்கதை என்னுடையது என்று கூறி சென்னையைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் வருண் என்கிற கே.வி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து வருண் குறிப்பிடுகையில், செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதி 2007ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கதையைத் திருடி, அதில் சில மாற்றங்கள் செய்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த விளக்கக் கேட்புக்கு பதிலளிக்கும் வகையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தெளிவாக விவாதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், சங்க உறுப்பினரான வருண் என்கிற கே.வி.ராஜேந்திரனின் செங்கோல் என்ற கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்றே என முடிவு செய்திருக்கிறோம்… என்று கூறப்பட்டிருக்கிறது!
நியாயம் வேண்டி, ராஜேந்திரன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு நாங்கள் தடை செய்ய மாட்டோம் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துவதாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ஒற்றை விரல் தூக்கி போக்குக் காட்டும் போட்டு போஸ் கொடுத்து சர்கார் படத்தின் பாடல் ரிலீஸ் விழாவில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கலந்து கொள்ள, அந்த நிகழ்ச்சியில் ஏகத்துக்கும் சோப்பு போட்டு வெளுக்க வெளுக்க திணறடித்தார் விஜய்! அந்த ஒரு விரல் கதை ஏற்கெனவே ஒரு விரல் காட்டி ஓட்டுப் போட முயன்று முடியாமல் போன பலரின் வாழ்க்கைக் கதை என்பதும், அந்தக் கதைகளைத் தொகுத்த ஒருவரின் நிஜ கற்பனைக் கதை என்றும் இப்போது தெரியவந்துள்ளது.