குற்றாலம்: இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திருக்குற்றாலம் அருவியில் நீராடி பூஜை செய்வதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதல் காலை 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கார்த்திகை மாதம் முதல் சோம விரதத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலை முதலே குற்றால அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிப்பாடு.நடத்தி வருகின்றனர். அருவியில் நீராடி, அரச மரம் சுற்றி வந்து நாக வழிபாடும் சோமநாதர் வழிபாடும் செய்வது தொன்றுதொட்டு கடைபிடிக்கப் பட்டு வரும் மரபு. இதை முன்னிட்டு, கார்த்திகை சோம வாரமான திங்கள் கிழமைகளில், அருவிகளில் அதிகாலை முதல் 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப் படுவர்.
குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கள் கிழமை முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அருவியில் புனித நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சோமவாரத்தில் கணவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டி பெண்கள் அதிகாலை வேளையில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் திருமாங்கல்ய பூஜை செய்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கள் கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் அதிகாலை 2 மணி முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடி, அருவிக்கரையிலுள்ள கன்னி விநாயகர் கோயில் மற்றும் செண்பக விநாயகர் கோயிலை 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
அதிகாலை1மணிக்கு மேல் காலை 9 மணி வரை பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தததால் ஆண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஆண்கள் பகுதியிலேயே பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு மேல் ஆண்கள் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல காலை 10.30 மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆண்கள் பகுதியில் பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் வரத்து சிறக்க இருப்பதால் இதனால் ஐயப்ப பக்தர்களும், சோமவாரத்திற்கு வந்த பெண்களும் மகிழ்ச்சியடைந்தனர்.காலை முதலே ஏராளமான போலீசார் குற்றாலநாதர் ஆலயம்,குற்றாலம் மெயினருவி,உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.