திருச்சி திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கனமழை காரணமாக நாகை, திருவாரூர் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து, திருச்சிக்கு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
முன்னதாக, புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் முதல்வர். வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்தில் தென்னந்தோப்பில் கஜா புயல் சேதத்தை ஆய்வு செய்த பின் முதல்வர் நிதியுதவி வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்; யாரும் விடுபட மாட்டார்கள். கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 22ஆம் தேதி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெறும் என்று, புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வுக்குப் பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதை அடுத்து, அவர் நாகை, திருவாரூர் செல்லாமல் பயணத்தை ரத்து செய்து, திருச்சிக்கு திரும்பினார்.