தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தந்தி டிவி.,யின் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து பெரும் புயலைக் கிளப்பியது.
மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் இரு கட்சிகளும் தோழமைக் கட்சிகள் என்றும், தற்போது அவை கூட்டணிக் கட்சிகள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன், துரை முருகன் கூறியதில் தவறு இல்லை. இப்போது நாங்கள் தோழமைக் கட்சிகளே என்றார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்துப் பேசினார்.
திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற செய்தியை அடுத்து திருமாவளவனுடன் ஸ்டாலின் சந்திப்பு நடத்துவது பரபரப்பை எற்படுத்தியது. இந்த சந்திப்பில் திமுக தரப்பில் தயாநிதி மாறன் ஆர்எஸ் பாரதி மற்றும் விசிக சார்பில் வன்னியரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. – விடுதலைச் சிறுத்தைகள் உறவு வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிச. 10-ம் தேதி நடத்தவிருக்கும் மாநாடு மற்றும் கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஸ்டாலின் உடன் ஆலோசித்தேன்! திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டுள்ள நட்பு, இணக்கமாக, வலுவாக உள்ளது, இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை! திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலரின் எண்ணம் நிறைவேறாது! இடைத் தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளாக மாறுவதில் எந்த பங்கமும் ஏற்படாது. தோழமை கட்சிகள் குறித்து தாம் ஏற்கெனவே கூறிய கருத்தைத் தான், துரைமுருகனும் கூறினார். துரைமுருகன் கருத்து எதார்த்தமானது என்றார்.