சென்னை: சென்னை உள்ளிட்ட எட்டு கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்! இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டத்தின் வட கடலோரப் பகுதிகளான பொன்னேரி, எண்ணூர், திருவெற்றியூர், பெரியபாளையம், கும்மிடிபூண்டி ஆகிய பகுதிகள், சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
முன்னதாக, வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம். நாளை சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
நாளை மறுநாள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும். நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.