சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்னை முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகலம் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை வரை மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். வடசென்னை மற்றும் இதர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,
இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையிலும் கூறப் பட்டுள்ளது.
இதனிடையே கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப் பட்டுள்ளதாக ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.
நாகையில் முகாம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப் பட்டுள்ளது.
முன்னதாக, தென் மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 2 நாட்களுக்கு கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும்,
கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் உள் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.