திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் 5 வெண்பட்டு குடைகள், பட்டு புடவை, சீர் வரிசைகள் காணிக்கையாக சமர்ப்பிக்கப் பட்டதாக, இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி தெரிவித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாள் பிரமோற்சவத்தில் தினந்தோறும் காலை, இரவு ஆகிய வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று இரவு முக்கிய வாகன சேவையான தங்க கஜ வாகன சேவை நடை பெறுகிறது. அப்போது மகாலட்சுமி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மாட வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
கஜ வாகன சேவையில் அலங்கரிப்பதாக சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி தலைமையில் 5 வெண்பட்டு குடைகள், பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு கோவில் செயல் அலுவலர் ஜான்சிராணியிடம் வழங்கப்பட்டன.
உதவி செயல் அலுவலர் சுப்ரமணியம், விஜிலன்ஸ் அதிகாரி அசோக் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி தமிழக பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் கருட சேவை அன்று சுவாமி வீதி உலாவின்போது பயன்படுத்துவதற்காக 11 பட்டு குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு கடந்த பிரம்மோற்சவத்தின் போது வழங்கப்பட்டது.
இதேபோன்று திருச்சானூர் அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்திற்கு வெண்பட்டு குடைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று 5 வெண் பட்டு குடைகள் , பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை பொருட்கள் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.