அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம்.
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால், மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காப்பற்றுவதற்க்காக, கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதிலும் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகளில் கால்நடைகளை விற்க்க வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தடை விதித்து வாரம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறையினரை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன், நல்லம்பள்ளியில் நேற்று கூடிய வாரச் சந்தையில், வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ள சம்பவம் கால்நடை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கால்நடை விவசாயிகள் கூறும் போது : நல்லம்பள்ளி வாரச் சந்தை ஒவ்வொ எ வாரமும் செவ்வாய் கிழமைகளில் கூடும். இந்த வாரச் சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியபாரிகள் ஆடு, மாடு ஆகியவைகளை அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்.
தற்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதால், அந்த நோயில் இருந்து கால்நடைகளை காக்க, மாவட்ட நிர்வாகம் கோமாரி நோய் தடுப்பூசிகளை மாவட்ட நிர்வாகம் கால்நடைகளுக்கு செலுத்தி வருகிறது. இந்த முகாம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதிலும் கூடும் வாரச்சந்தைகளில் கால்நடை விற்பனையை டிசம்பர் 31 வரை தடை விதித்துள்ளது.
ஆனாலும் நேற்று நடந்த நல்லம்பள்ளி வாரச்சந்தையில் அதிகாரிகள் மேற்பார்வையில் வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தற்போது வெளி மாவட்ட கால்நடைகள் மூலம், நல்லம்பள்ளி வட்டத்திற்க்குட்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, நல்லம்பள்ளி வாரச் சந்தை பகுதியில் கால்நடைகளை விற்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .