வீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்! அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.!
சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரை நிகழ்த்தினார்.
இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் மண்டபத்திலும், ஊட்டி ஒய்.எம்.பி.ஏ.,மகாலிலும் மற்றும் நாமக்கல் கவின்மஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.
முதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி தமிழ் நாட்டின் சிறப்பு, தமிழின் சிறப்புக்களை விவரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
முதலில் கோவை மாவட்டத்தினரை பேச அழைத்தார். அதற்கு முன்பு தேசத்தில் கோவை மாவட்டத்தின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்தினரையும் பேச அழைத்தார். அனைவரும் தாங்கள் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய விஷயங்கள் குறித்தும், சில திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கேட்டனர்.
5 மாவட்டத் தலைவர்களும் பிரதமரிடம் பேசினர். அப்போது பதிலளித்த மோடி அவர்கள் வரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சிபணிகள், வரும் 2019 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொண்டர்களிடம் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தொழில்துறையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. 3 மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் பிரதம மந்திரி யோஜனா, முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது…
வடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது,தற்போது, கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கழிப்பிடத் திட்டங்களை நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் முந்தைய 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகளை விட பா.ஜ.க-வின் நாலரை ஆண்டுகளில் கூடுதலாக 1300 கிலோமீட்டர் அமைக்கப்பட்டதாக கூறினார். அதேபோல, இந்த மாநிலத்தில் மட்டும் 27 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டத்தை அதிக அளவில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டது என்றும் பக்கா வீடுகள் திட்டத்தில் மட்டும் நான்கு இலட்சத்து முப்பதினாயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.
மூத்த குடிமக்களுக்கு செய்துவரும் பல திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார். அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள், மலிவு விலை மருந்து கடைகள் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவான விலையில் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கான இலவச டயலசிஸ் திட்டங்கள், ஜி.எஸ்.டி மூலம் பாதிப்பு இல்லாமல் நடுத்தர மக்களை காப்பாற்றியது, அரிசி பருப்பு விலைகளை விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது, விவசாயிகளுக்கு ₹300 விலையில் யூரியா வழங்குவது ஆகிய பல திட்டங்களை பற்றி எளிமையாக விவரித்த மோடி, இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறும் அவர்களையும் நம் தேச தொண்டின் பங்குதாரர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
தகவல்: R.V. ஐயப்பன், குமாரபாளையம்.