செங்கோட்டை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட உத்தரவு அமல்படுத்துவது குறித்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் வருகிற ஜனவரி 1 ம தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான அரசின் தடை உத்தரவு அமுலுக்கு வருகிறது.
இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடந்து வருகிறது.
இதே போல நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நகராட்சி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். வர்த்தக சங்கத் தலைவர் ரகீம் முன்னிலை வகித்தார்.
சுகாதார அலுவலர் வெங்கடேசன், துப்பரவு ஆய்வாளர் மகேஷ்வரன், சுகாதார மேற்பார்வையாளர் முத்து மாணிக்கம், வட்டார வேளாண்மை அலுவலர் சேக் மைதீன், வர்த்தக சங்க செயலாளர் சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் துணிப்பைகள் உபயோகம், பிளாஸ்டிக் பைகள் தவிர்த்தலின் அவசியம் குறித்து வியாபாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகை, ஓட்டல் உள்ளிட்ட வியாபார சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்.