கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து, மத்தியக் குழு நேரடியாக வந்து, புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.15 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய உயர்நிலைக் குழு கூட்டத்தில் கஜா புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவியாக ரூ.1,146 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப் பட்டது.