தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அப்சல்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இர்பான் என்பவர் நின்றிருந்தார். அவரிடம் அங்கே போதையில் வந்த பெண், தன் கையில் இருந்த குழந்தையைக் கொடுத்து, சற்று பார்த்துக் கொள்ளுங்கள், நான் பாத்ரூம் சென்றுவருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் அந்தப் பெண் வரவில்லை. இந்நிலையில் அந்த இரண்டு மாதக் குழந்தை பசி தாங்காமல் அழத் தொடங்கியது. புட்டிப்பால் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார் இர்பான். ஆனால், முடியவில்லை. இதனால் அவர் அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்றார்.
குழந்தையின் தவிப்பையும் பசியையும் உணர்ந்த ஏட்டு ரவீந்திரன், மகப்பேறு முடிந்து பிரசவ விடுமுறையில் வீட்டில் இருக்கும் தனது மனைவி பிரியங்காவிடம் கூறினார். பசியால் துடித்து வீறிட்டு அழுத குழந்தையின் அழு குரல் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த பிரியங்காவை என்னவோ செய்தது.
வாடகைக் கார் பிடித்து அப்சல்கஞ்ச் காவல் நிலையம் வந்த பிரியங்கா, உடனே அக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டினார். தகவலறிந்த ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார், தலைமைக் காவலர் ரவீந்திரனின் மனிதநேயத்தைப் பாராட்டினார். குழந்தையின் பெற்றோர் தேடி வரும் வரை அந்தப் பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைத்தார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை பலரும் பாராட்டுதல்களுடன் வைரலாக்கி வருகின்றனர்.