மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
கடந்த 03/01/2019 அன்று தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களை அவரது டெல்லி இல்லத்தில் நேரில் சந்தித்து முட்டையிடும் கோழிகளை பேட்டரியில் இயங்கும் கூண்டுகளில் வைத்து பராமரிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நெறிமுறைகளை வகுக்கும்படி கோரிக்கை மனு அளித்தனர்.
உத்தர்காண்ட் மாநில உயர் நீதிமன்றம் தன்னுடைய 14 ஆகஸ்ட் 2018 தீர்ப்பின் மூலம் முட்டையிடும் கோழிகளை பேட்டரியில் இயங்கும் கூண்டுகளில் வைத்து பராமரிப்பதை தடை செய்தது.
இதனை எதிர்த்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.
கோழி வளர்ப்பு இந்தியாவின் மிகச் சிறந்த விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பயன்பெறுகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த தொழிலை பிரதானமாக நம்பி இருக்கிறார்கள்.
மேலும் கோழி முட்டை ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குவதால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கோழி வளர்ப்பு முறையில் புதிய நெறிமுறைகளை வகுத்து வரும் வேளையில் முட்டை உற்பத்தி யாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நெறிமுறைகளை வகுக்கும்படி மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.