22 கட்சி கூட்டணி கூட்டிய கூட்டத்தை விட ஒரே கட்சியாக பாஜக., கூட்டிக் காட்டிய கூட்டம் மேற்கு வங்கத்தை அரள வைத்துள்ளது.
கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸின் முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் பலத்துடன், துப்பாக்கி முனையில் தனது தொண்டர்களை விட்டு பொதுமக்களை அச்சுறுத்தித் திரட்டியும் சேர்த்து வைக்காத கட்டுக்கடங்காத கூட்டம் மோடிக்காக நேற்று மேற்கு வங்கத்தில் திரண்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, அன்பால் இணைந்த மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவரது பேச்சைக் கேட்க கூடியவர்களால் மக்கள் நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசலில் சிக்கி எவரும் காயம் அடையக் கூடாது என்பதால், தனது பேச்சையும் உடனே நிறுத்தி, அவர்களை ஒழுங்க படுத்த உதவினார் மோடி.
இந்தக் கூட்டத்தில் மோடி பேசியவை…
மேற்கு வங்கத்தை ஏற்கனவே ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் அரசைப் போன்று, மம்தா பானர்ஜியும் ஜனநாயகத்தை நசுக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் தாகூர்நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இடைக்கால பட்ஜெட் நலத்திட்டங்கள் வழங்கும் அரசின் முயற்சியின் வெறும் துவக்கம் தான் என்றார்.
மக்களவை தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு அதிக பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் மூலம் சிறு விவசாயிகளின் 12 கோடி குடும்பங்கள், 30 முதல் 40 கோடி வரையிலான தொழிலாளர்கள், 3 கோடி நடுத்தர குடும்பத்தினர் நேரடியாக பயனடைவார்கள் என்று மோடி தெரிவித்தார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த மதுவா இன மக்களின் குடியுரிமை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று மோடி உறுதி அளித்தார். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நெரிசல் காரணமாக கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், 14 நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து துர்காபூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், மிகப் பெரிய அரங்கமாக இருந்தாலும், அது மிகச் சிறிதாகவே ஆகியிருக்கிறது. துர்காபூரில் நம்முடன் இணைந்துள்ள சகோதர சகோதரிகளால் என்று கூறிய மோடி, பாஜகவினர் மீது மக்கள் அன்பு செலுத்துவதை, முதலமைச்சர் மம்தா பானர்ஜியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
இவ்வாறு பெரும் அளவில் கூடி தனக்கு ஆதரவு அளிப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, மேற்கு வங்க மாநில அரசு பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஊழல் மற்றும் கிரிமினல் சக்திகளை எதிர்த்துப் போராட எனக்கு உங்கள் பலத்தையும் சக்தியையும் ஆசிகளையும் அளியுங்கள் என்று கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார் மோடி!
நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், மேற்குவங்கத்தில் உள்ள கிராமங்கள் வளர்ச்சியின்றி புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பது துர்பாக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான எனது போரினால் பலர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள், அவர்கள் கோல்கத்தாவில் கூடி என்னை வசைபாடினார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பதற்காக தங்கள் ஊழலை மறைப்பதற்காக கூடினார்கள். ஆனால் நான் ஊழல்வாதிகளை தண்டிக்கும் வரை ஓயமாட்டேன். திரிணமுல் காங்கிரஸ் மாநிலத்தை அழித்து வருகிறது. ஆனால் அவர்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன, இதை நான் உங்களுக்கு உறுதியுடன் கூறுகிறேன்.
கடந்த மாதம் 23 எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மாநாடு நடத்தியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து பேசி கொள்ள முடியாத நிலையில் இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொள்வதைப் பார்க்க முடிவதாக விமர்சித்தார்.