நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நேரில் தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை,. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தானே களம் இறங்கி, நேரில் அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பு தமிழகத்தை கூட்டணி பேரங்களால் தொற்றிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழக அரசியல் தலைவர்களும் பயங்கர சுறுசுறுப்பாக உள்ளனர். கூட்டணி பேரங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், தேமுதிக., இன்னமும் இழுபறியில் உள்ளதால், கூட்டணிப் பேச்சும், அதற்காகக் காத்திருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கும் இட ஒதுக்கீடும் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்னும் சேரவில்லை என்பதால், திமுக., சற்றே உஷார் அடைந்துள்ளது.
விஜயகாந்த் இன்னமும் சவ்வ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால், நேற்று திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை சந்தித்து, அரசியல் பரபரப்பு நிலவும் நேரத்தில் அரசியலைப் பேசாமல் என்ன வெட்டிக் கதை அளக்கவா வந்தேன் என்று மூஞ்சியில் அடித்தது போல் செய்தியாளர்களிடம் கேட்டுவிட்டுச் சென்றார்.
இதனிடையே, இன்று காலை ரஜினி வந்து சந்தித்தார். ஆனால், அவர் இதில் அரசியல் இல்லை, வெறுமனே வந்து உடல் நலம் விசாரித்தேன் என்றார் . ஆனால் அவரது பேச்சை எவரும் நம்பத் தயாரில்லை.
இப்போதும் ஒரு அரசியல் தலைவரின் பேச்சை மக்கள் நம்பத் தயாரில்லை. அது மு.க.ஸ்டாலின். இன்று அவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். ஆனால், அவரிடம் கேட்டபோது, அரசியல் எல்லாம் ஒன்றும் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்றார்.
எனினும் தேமுதிகவை திமுக., முயன்று வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாமக., தான்வெளியே போயிற்று… விஜயகாந்த் ஆவது உள்ளே வரட்டும் என்று, ஸ்டாலின் நினைப்பதால், கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் விஜயகாந்த் வீட்டுக்கு வந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னர், விஜயகாந்த்தை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தேமுதிக.,வின் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வரும் சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருநாவுக்கரசருக்கு கொடுத்த அசைன்மெண்ட் தோற்று விட்டதால், தானே நேரடியாகக் களம் இறங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அதனால்தான் விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசியுள்ளார் ஸ்டாலின். இது, கூட்டணிப் பேச்சாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்குமே எழுந்துள்ளது.