காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை நேற்று திருப்பதியில் இருந்து திருமலை வரை மலையேறிச் சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திருப்பதியில் நேற்று காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக அவர் வந்தார். அவருடன் பிரியங்கா ராபர்ட் வதேராவின் மகன் ரைஹன் வதேராவும் வந்திருந்தார்.
திருப்பதி விமான நிலையத்தில் இருந்து திருமலை அடிவாரமான அலிபிரி வரை காரில் வந்த ராகுல், பின்னர் அங்கிருந்து பக்தர்கள் நடந்து செல்லும் வழியில், நடைப் பயணமாகவே திருமலைக்குச் சென்றார்.
அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் சென்றனர். திருப்பதி கோயிலுக்கு படி ஏறிச் சென்ற பக்தர்கள் பலரும் அவருக்கு கைகொடுத்தனர். பாதுகாப்பு கெடுபிடிகளை விலக்கி விட்டு ராகுல் பக்தர்களுடன் உரையாடினார். ஆனால் அப்போது அவர் காலில் ஷூ அணிந்து சென்றது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
அடுத்து, ராகுல் திருப்பதி மலையில் சுவாமி தரிசனத்துக்காக நடந்து வந்தபோது, பஞ்ச கச்ச முறையில் வேட்டி அணிந்திருந்ததையும் அப்போது அவர் நடந்து வந்த முறையையும் வீடியோவாக சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.
தன்னை ஒரு கவுல் பிராமணன் என்று சொல்லிக் கொண்ட ராகுல், திருமணமானவர்கள் மட்டுமே உடுத்திக் கொள்ளக் கூடிய முறையில் வேட்டியை மடித்துக் கட்டியிருந்ததும், இதுவரை பழக்கமில்லாத உடுப்பு முறையை திடீரென மாட்டிக் கொண்டு, கையைக் காலை உதறி நடந்து வந்ததைக் கண்டு பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஆயினும், வட இந்தியாவில் திருமணமாகாதவர்கள் கூட பஞ்சகச்சம் கட்டுவது வழக்கம் தான் என்றும், தற்போது, ரெடிமேட் பஞ்சகச்ச வேட்டி கிடைக்கிறது அதைத்தான் அப்படியே மாட்டிக்கொண்டு வந்தாரோ ராகுல் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
[videopress HQDWuZoO]
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக திருமலை வேங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புகாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரிவினையை செயல்படுத்தியது காங்கிரஸ். முன்னேற்பாடுகள், திட்டமிடல்கள் எதுவும் இன்றி பிரிவினையை செய்ததும் காங்கிரஸ். தெலங்கானா ராஷ்டிரீய சமிதியுடனான கூட்டணிக்காகவும், ஓட்டுக்காகவும் காங்கிரஸ் அவசர கதியில் பிரித்தது. அப்போது, ஆந்திரத்தை சமாதானப் படுத்தவும், அடுத்த தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசியது. ஆனால், காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
பின்னர் வந்த மோடி தலைமையிலான பாஜக., அரசு ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால், தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று, தமிழக நலனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடிதம் மேல் கடிதம் மோடிக்கு எழுதினார். ஜெயலலிதாவுக்கு மதிப்பளித்தும், நிலைமையை நன்கு கவனித்தும், தமிழகத்துக்கு தீங்கிழைத்துவிடக் கூடாதென்ற நோக்கில், ஆந்திரம் கேட்கும் சிறப்பு அந்தஸ்து என்பதை சற்று ஒத்திவைத்துவிட்டு, மோடி, நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் செயல்படுத்தப் படுதலில் மட்டும் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், நாயுடுவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்ப்பதும், நாயுடுவின் கையைப் பிடித்துக் கொண்டு திமுக., ஸ்டாலின் கொஞ்சுவதும், தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதகமாகவே அமையும்!