புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது இந்திய ராணுவம்!
இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் வெளியானது. 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், பயங்கரவாத முகாம்களை அழித்ததாகவும் தகவல் வெளியானது.
பாக்கிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரத்தின் எல்லைக் கோட்டை தாண்டியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.