பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாரதத்தில் உள்ள சிலர், நேற்று இம்ரான் கான் பேசியதைக் கொண்டாடிக் கொண்டு, சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த நாடு கொடுத்த கருத்துச் சுதந்திரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
உண்மையில், எத்தகைய பொய்களை இம்ரான் கான் கூறியுள்ளார். உண்மையில் இந்தியாவின் இலக்கு என்ன? புரிந்து கொள்ள முயன்றால் எத்தகைய அபாயகரமான வலையில் இந்தியர்கள் விழுந்திருக்கிறார்கள் என்பது புரியும்!
நம் நாட்டின் இலக்கு… #தாவூத்_இப்ராஹிம் #மௌலானா_மசூத்_அசார் #பயங்கரவாதிகள்
பாரதம் தேடிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் நம்மிடம் ஒப்படைக்காதவரை… பயங்கரவாத முகாம்களை துடைத்தெறியாதவரை… ஒப்பாரிகளுக்கும் அழுகுரல்களுக்கும் இந்தியா மயங்கவோ மடங்கவோ மசியவோ கூடாது!
ஓர் அறையில் அமர்ந்து கொண்டு எவர் வேண்டுமானாலும் டிவிட்டரில் hashtag போட்டு அவரவருக்குத் தேவையானதைப் போட்டு டிரெண்ட் ஆக்கலாம்! அது ஒட்டு மொத்த மக்களின் மனதின் பிரதிபலிப்பல்ல..!
சொல்லப் போனால், இன்னும் சில நாட்களுக்கு டிவிட்டர் தளத்தை மத்திய அரசு இந்தியாவில் முடக்கி வைக்கலாம்! தவறில்லை! டிவிட்டர் வழியேதான் அரசாங்கத்தின் தகவல் தொடர்பு இருந்தாக வேண்டிய அவசியமில்லை! இன்று அமைதி வேண்டுபவர் எல்லாம்… பயங்கரவாதிகளிடம் விலை போனவர்களே! அல்லது அவர்களை அறியாமலேயே பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து உளறிக் கொண்டிருப்பவர்களே! இவர்களுக்கு ராணுவத்தின் மீதோ அல்லது இந்திய நீதித்துறையின் மீதோ அச்சம் வந்துவிட்டால், இந்த உளறல்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் நின்று போகும்!
அன்று பண்டமாற்று முறையில் மசூத் அசாரை விடுவித்திருக்காவிட்டால்… மும்பையில் 170க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதற்கொண்டு யாரும் மடிந்திருக்க மாட்டார்கள்.! இன்று 40 வீரர்கள் மறைந்திருக்க மாட்டார்கள்! இன்று அமைதிக்கான ஹேஷ் டேக் போடுவதன் மூலம், நாளை நமது மகனோ மகளோ கூட வெடிகுண்டுகளுக்கு பலியாகப் போகிறார்கள் என்பதை உணராத அறிவிலிகள் இவர்கள்!
நம் நாட்டின் இலக்கு… அறிவிக்கப்பட்ட போர் அல்ல!
நம் நாட்டின் இலக்கு … பாகிஸ்தானிய பொதுமக்கள் அல்ல!
நம் நாட்டின் இலக்கு… பாகிஸ்தான் அரசோ ராணுவமோ அல்ல…
நம் ஒரே இலக்கு… துப்பாக்கி தூக்கிய பயங்கரவாதிகளே!
அவர்கள், பொதுமக்களின் பின்னே கோழைகளாய் ஒளிந்து கொண்டு, நம்மைக் கருவறுக்க நம் நாடு விடக் கூடாது!
நம்முடைய விங் கமாண்டர் அபிநந்தனை வெளிப்படையாக உலக நாடுகளுக்கு காட்டிய போதே, பாகிஸ்தான் மேற்கொண்டு போருக்கு மல்லுக்கட்டாது என்பது உலகுக்குத் தெரிந்து விட்ட செய்தி.
எனவே ஆவேசத்தை குறைத்துக்கொண்டு ராஜதந்திரத்தைக் காட்ட வேண்டியதுதான் இப்போது நமக்குள்ள தேவையாக இருக்கிறது! இதன் பொருள் சமரசமாய்ப் போவது என்பதல்ல.! பம்மிக் கொண்டு சமாதானம் பேசிக் கொண்டிருப்பவனை காலத்திற்கும் பய பக்தியோடு இருக்கும் வகையில் வைப்பது. மரண பயத்தை காட்டவேண்டுமே தவிர, மரணத்தையே காட்டக்கூடாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் தான் முன் நிற்கிறோம் என்று சொல்லிவந்த பாகிஸ்தானுக்கு இன்று இந்தியா ஒரு செய்தி சொல்லியிருக்கிறது. வாங்க, நாம் இருவரும் சேர்ந்து பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று.!
ஆனால், தமிழகத்திலோ டிவிட்டரை மையப்படுத்தி ஒரு பிரசாரத்தை முன்வைத்திருக்கிறார்கள்!
தமிழகத்திலிருந்து போர் வேண்டாம் என்று சொல்பவர்கள் இரு தரப்பினர். முதல் தரப்பினர் உண்மையாகவே போர் வேண்டாம் என்று கருதுகிறவர்கள். இரண்டாம் தரப்பினர் இந்தியாவை, இந்திய ஒற்றுமையை அடியோடு வெறுக்கும் பொறுக்கிகள். அயோக்கியர்கள்.
இந்தியாவின் கை ஓங்கியிருப்பதாக அவர்கள் நினைப்பதால் போர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் கை ஓங்கினால் இவர்கள் வாய் அடைத்துப் போய் விடும்.
இம்ரான்கானை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்வது வேறு. அவருக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேசுவது வேறு.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியவில்லை என்பது எல்லா நாடுகளுக்கும் தெரிந்தது. அந்த அளவில் இந்தியா எடுத்த நடவடிக்கையை அனேகமாக எல்லா நாடுகளும் ஆதரிக்கின்றார்கள். மோடி, இந்தியப் பிரதமர். ஆனால் பிரிவினைப் பொறுக்கிகள் அவர் இந்தியப் பிரதமர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இம்ரான்தான் அவர்களுக்கு பிரதமர். வெட்கம் கெட்ட பிறவிகள் இவர்கள்!
உண்மையில், பாகிஸ்தான் நேரடிப் போர்களை நடத்திய போது நிகழ்ந்த இழப்புகளை விட, பயங்கரவாதிகள் மூலம் நடத்திக் கொண்டிருக்கும் மறைமுகப் போரில் இறந்துபோன இந்தியர்கள், வீர்ர்களின் எண்ணிக்கை வெகு அதிகம்.
போர்க்காலத்தில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள்:1965- 3000, 1971- 2500, 1999- 527…!
ஆனால், 1999க்கு பிறகு “அமைதிக்” காலத்தில்: 4300க்கும் அதிகம்! 1988-2019 ல் காஷ்மீர்ல, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் மட்டும்: 6503
அமைதிப் பேச்சுவார்த்தை என்று கூவிக் கொண்டிருக்கும் அறிவிலிகளிடம் என்ன வேண்டும் என்று இப்போது கேட்டால், இம்ரான்கான் சொல்வதை பட்டியலிட்டுக் காட்டுவார்கள்.
இம்ரான் அப்படி என்ன பேசினார்…!
பயங்கரவாதத்தால் நாங்கள் இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம்! ஓர் உயிர் போவதால் அந்தக் குடும்பத்திற்கு எத்தனை இழப்பு., காயம் பட்டவர்களுக்கு எத்தனை நாள் மருத்துவமனை அலைக்கழிப்பு என்பதை நன்கு அறிவோம்.
புல்வாமா எனும் துயர சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே அமைதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது !
இந்த விஷயத்தில் இந்தியாவுடன் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தாயாராகவே உள்ளோம்! அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம்! ஆனால் இந்தியா அப்படி இணக்கமாக நடக்குமா என தெரியவில்லை!
ஒருவேளை இந்தியா இதை ஆயுதம் மூலமே பேசுவோம் எனக் கூறினால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் ! காரணம், எந்த ஒரு நாடும் தன் இறையாண்மையை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காது !
நேற்று காலையில் இந்தியா தாக்குதல் நடத்திய உடனே நாம் திருப்பி தாக்குதல் நடத்தவில்லை… முழுமையாக என்ன நடந்தது என தெரியாமல் ஒரு செயலில் இறங்குவது என் பொறுப்புக்கு அழகல்ல! எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம்!என்ன சேதம் என்று ஆய்வு செய்தோம் .., அதன் பின் இன்று PAK விமானத்தை அனுப்பினோம்., அதுவும் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி வந்தோம் !
இந்தியா உள்ளே வந்தால் நாங்களும் உள்ளே வருவோம் என்பதை காட்டுவதற்க்காக மட்டுமே அதை செய்தோம் !
இந்தியாவின் இரு விமானங்கள் காலையில் உள்ளே வந்தது…, அதை சுட்டு வீழ்த்தி உள்ளோம்!போர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று!முதல் உலகப்போர் சில வாரங்களில் முடிந்து இருக்க வேண்டியது… ஆனால் 6 வருடங்கள் தொடர்ந்தது !
War On Terrorism என்ற பெயரில் அமெரிக்கா தொடங்கிய போர்கள் 17 வருடம் தாண்டியும் இன்றும் முடியவில்லை!
நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்…,உங்களிடம் இருக்கும் அதே ஆயுதம் தான் எங்களிடமும் உள்ளது !
இந்தப் போர் தொடங்கி விட்டால் எப்போது முடியும் என்பது மோடியின் கையிலும் இல்லை என் கையிலும் இல்லை..!
I once again invite you (India) :- we are ready for dialogue … புல்வாமா எத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன்! அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும்! வாருங்கள் அமர்ந்து பேசுவோம் பிரச்னையை தீர்ப்போம்…!
– என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இம்ரானின் பேச்சுக்களில் இருந்தே, அவர்களின் பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த பயம்தான், பாகிஸ்தானை ஒரு வழிக்குக் கொண்டு வர பயன்படப் போகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியா தலைமை ஏற்கும் நேரம் இது! பாகிஸ்தான் தூய்மை பெறும் நேரம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்து, பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்நாட்டை விடுவித்தால்… பாகிஸ்தானில் உண்மையிலேயே அமைதியை விரும்பும் மக்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் இந்தியாவை வாய் நிறைய வாழ்த்துவார்கள்!
உலகம் பயங்கரவாதத்தின் கொடூரக் கரங்களில் இருந்து தப்பிப் பிழைக்கும்!