தேமுதிக கூட்டணி தொடர்பாக தங்களுடன் பேச்சு நடத்தியதை வெளியில் பகிரங்கமாகச் சொல்லி திமுக., தாங்கள் எப்படிப்பட்ட கட்சி என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார் தம்பிதுரை.
மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக நிர்வாகிகள் தங்களுடன் பேச்சு நடத்தியதை துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, இதன் மூலம் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை அது வெளியுலகுக்குக் காட்டிக் கொடுத்துள்ளது…என்றார்.
மேலும், ஒரு கட்சி கூட்டணிக்காக பல இடங்களில் பேசுவது இயல்பு! அதை அநாகரிகமாக துரைமுருகன் வெளிப் படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்யும்? இந்தியாவை எப்படி காப்பாற்றும்? தமிழகத்தை எப்படி காப்பாற்றும்? தமிழ் இனத்தை எப்படிக் காப்பாற்றும்? தமிழ் மொழியை எப்படிக் காப்பாற்றும்? என்பதை நீங்களே துரைமுருகன் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தனித்துப் போட்டியிட்டே அதிமுக வென்றுள்ளது, ஒரு கட்சி கூட்டணிக்குள் வந்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி என்ற நிலை இல்லை. இருப்பினும், விஜயகாந்த் கட்சியும் எங்களுடன் வரவேண்டும் என்றே விரும்புகிறோம்.. என்றார் தம்பிதுரை.