பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் இன்று மாலை அவர் காலமானதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோவாவில் அமைந்த பாஜக., அரசை திறம்பட நடத்திச் சென்றவர் முதல்வர் மனோகர் பாரிக்கர்! 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார்.
கோவாவைக் கையாள சரியான நபர் இவர் மட்டுமே என்ற நிலையில், மத்திய அமைச்சர் என்ற நிலையில் இருந்து மீண்டும் கோவா முதல்வர் என்ற நிலைக்கு பாஜக., மேலிடம் அவரை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
ஆனால் சனிக்கிழமை நேற்று காலை, மனோகர் பாரிக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மிகத் தீவிரமாக போராடியதாகவும், ஆனால், அவர் உடல் சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லாததால், அவர் காலமானதாகவும் தகவல் வெளியானது.
மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) March 17, 2019