மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி இடுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்று ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக., கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடும் வேட்பாளர் குறித்து, அக்கட்சியினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்!
இந்நிலையில் தமாகா.,கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.