அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது என்று குறிப்பிட்ட நடிகர் கார்த்திக், அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன் என்று கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க இன்றுகாலை வந்திருந்த நடிகர் கார்த்திக், அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என்று கூறினார்.
முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்து முன்னர் நாடாளும் மக்கள் கட்சி என்று ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வந்த நடிகர் கார்த்திக், பின்னர் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கினார்.
நடிகர் கார்த்திக் கடந்த 2006ல் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் 2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை கார்த்திக் தொடங்கி அவரே அதன் தலைவராக இருந்தார். இந்த கட்சி அப்போது நடந்த பொதுதேர்தலில் பாஜக கூட்டணியிலும் இடம் பெற்றது.
2016ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் கடந்த 2018 டிசம்பரில் திருநெல்வேலியில் நாடாளும் மக்கள் கட்சி கலைக்கப் படுவதாகவும், புதிதாக மனித உரிமை காக்கும் கட்சி தொடங்குவதாகவும் கூறி, அக்கட்சியின் கொடி ஆகியவற்றை அறிமுகம் செய்தார்,. சிவப்பு மஞ்சள் நிறத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்துடன் கூடிய கொடியை அறிமுகப் படுத்தினார்.
இந்நிலையில், அதிமுக.,வுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதிமுக.,வுக்காக தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாகவும் கூறினார்.
உங்கள் கட்சியை அதிமுக.,வில் இணைத்து விடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதைக்கு ஆதரவு பிரசாரம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் கார்த்திக்.