திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு கருத்துகள் தெரிவித்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அப்படியே காப்பி அடிக்கிறாரே! ஸ்டாலின் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா? என்று கிண்டல் செய்திருக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் மோடியின் திட்டங்களைக் காப்பியடித்திருக்கிறாரே! மு.க.ஸ்டாலின் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காலை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்ட்டார். அதில் நிறைவேற்ற இயலாத, அல்லது தனது அதிகார வரம்புக்கு உள்படாத பலவற்றை தாம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். அடுத்து சிறிது நேரத்தில் அதிமுக., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய அரசின் முத்ரா வங்கி தமிழகப் பெண்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றியுள்ளது.
ரூ.50 ஆயிரம் மட்டுமல்ல… ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பல்லாண்டுகளாக மத்திய அரசால் ஏற்கெனவே கொடுக்கப்படும் கடன் போல, பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகள் தவறாக உள்ளன.
கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப் படும் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அங்கு நான்காவது முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் தமிழகத்தில்தான் இருக்கிறாரா என்பது மட்டுமல்ல.. அவர் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.
நீட் தேர்வு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் எப்படி புத்துயிர் கொடுக்க முடியும்? ஏதோ ஒப்புக்குச் சொல்வோம், சட்டரீதியில் அது நடைமுறைப்படுத்த முடியுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றே அவர் நினைக்கிறார் போல் தெரிகிறது.
திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை முற்றிலும் பொய். ஏற்கெனவே மத்திய அரசு நடத்துவதை, இல்லை என்று சொல்லும் அறிக்கையாக அமைந்துள்ளது. இதை மக்கள் நிச்சயமாக நம்பப் போவதில்லை. திமுக தேர்தல் அறிக்கை பொய்யான, மாயை தேர்தல் அறிக்கை !
நல்ல திட்டங்களைக் கொடுத்து வருகிறார் மோடி. அதே நேரம் அதிமுக தேர்தல் அறிக்கையில், உதவித் தொகைகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையிலும், 5 முறை தமிழகத்தையும் ஆண்ட திமுக ஏன் எதையும் செய்யவில்லை என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, இனி இதை எல்லாம் செய்வோம் என்பதைச் சொல்லுங்கள்….
நாங்கள் அப்போது மறந்து விட்டோம்; இப்போது மோடியைப் பார்த்துத்தான் வளர்ச்சித் திட்டங்கள் இருப்பதைக் கற்றுக் கொண்டோம், அதனால்தான் இப்போது இந்த யோசனைகள் வந்தன என்று சொல்லுங்கள். அதை ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.