திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.
உடல் நலக்குறைவால் அப்போது வெற்றி பெற்றிருந்த ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் எனினும் இந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
திமுக வேட்பாளர் சரவணன் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்பதால் தன்னை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த சரவணனின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கூறி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
திடீரென எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக் குறைவால் காலமானார். இதை அடுத்து, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, நிலுவையில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையத்தில் செயல் குறித்து நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
பின்னர், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு மார்ச் 22 (இன்று) வழங்கப்படும் எனக் கூறினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், ஏ.கே.போஸ் இறந்து விட்டதால், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக்கூறி சரவணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பு கூறினர்.