யாசின் மாலிக் தலைமையிலான கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதாகக் கூறி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு இந்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது!
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் பேசி அமைதியின்மையை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக். அவரது கட்சியான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது தடை செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை அடுத்து, பெரும்பாலும் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு மத்திய அரசு அளித்து வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு கோதிபாஹ் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேசிய விசாரணை ஆணையம் சோதனைகளை நடத்தியது. இந்நிலையில் தற்போது யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அமைதியை சீர் குலைத்து வருவதால், யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.