கருணாநிதி எப்போது சாவார் எனக் காத்திருந்து திமுக.,வுக்கு தலைவரானவர் ஸ்டாலின்! – இப்படி பட்டவர்த்தனமாகக் கூறாவிட்டாலும், உயிரோடு இருந்தவரை ஸ்டாலினை தலைவராக்காத கருணாநிதியை 2 வருடம் வீட்டுச் சிறையிலேயே வைத்தவர் ஸ்டாலின் என்று பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
கடந்த 2016ஆம் வருட சட்டமன்றத் தேர்தலின் போது, கருணாநிதி மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன் நின்றார். ஆனால் அப்போது ஸ்டாலினை முன் நிறுத்தும் முயற்சியில் திமுக.,வினர் சிலர் இறங்கினர். அது குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஸ்டாலினை முன்னிறுத்துவதால், கட்சியில் பிளவு வரும் என்றோ, கலகம் வரும் என்றோ நினைத்த கருணாநிதி, அதை ஏற்கவில்லை. மேலும், தான் இருக்கும் வரையில் தானே முதல்வர் என்று தீர்மானமாக இருந்தார். தனக்குப் பின் தன் மகன் ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காகத்தான், வைகோ தொடங்கி, தன் இன்னொரு மகன் அழகிரி வரை அனைவரையும் ஓரம் கட்டி, கட்சியை விட்டுத் துரத்தி விட்டார்.
இந்நிலையில் மீண்டும் அவரிடம் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். மேலும் கட்சித் தலைவராக ஸ்டாலினை ஆக்குவது குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டபோது, அதற்கு பதிலளித்த கருணாநிதி, எனக்காக இயற்கையாக ஏதாவது ஏற்பட்டால், அதன் பின் ஸ்டாலின் ஆவார் என்று கூறினார்!
எனவே அதுவே தனக்கு கடைசி தேர்தல் என்றும் தன்னை வெற்றி பெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றும் வழக்கம் போல் பல்லவி பாடினார் கருணாநிதி! ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இதுவே என் கடைசித் தேர்தல் என்று கூறியதை தமிழர்கள் ஏற்கவில்லை. அந்தத் தேர்தலில் திமுக., தோல்வி அடைந்தது. ஆனால் கருணாநிதியை மட்டும் வெற்றி பெற வைத்தனர் அவரது ஊர் மக்கள்!
இருப்பினும் தேர்தல் முடிந்த கையுடன் உடல் நலக் குறைவால் வெளியில் தலைகாட்டுவதைத் தவிர்த்தார் கருணாநிதி. தொடர்ந்து வீட்டுக்குள் முடங்கினார். அவ்வப்போது காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு அழைத்துச் சென்றார்கள் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர்.
கருணாநிதி உயிருடன் இருந்தவரை, தானே தலைவர், தானே முதல்வர் வேட்பாளர் என்று இருந்தார். எனவே தன்னால் செயல்பட இயலாத நிலையில், திமுக., பொருளாளராக இருந்த ஸ்டாலினை செயல் தலைவர் ஆக்கினார். கருணாநிதி மறைந்த பின்னரே செயல் தலைவராக இருந்த ஸ்டாலினின் பதவியில் ‘செயல்’ காணாமல் போனது!
இந்நிலையில், ஸ்டாலின் தற்போதைய தேர்தல் பிரசாரங்களில், ஜெயலலிதா மரணம் குறித்தும், அடிமை ஆட்சி என்று எடப்பாடியையும் குறிவைத்து தாக்கிப் பேசி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமியும் இப்போது ஸ்டாலினை மிகச் சரியாகக் குறி வைத்து குதறி எடுத்து வருகிறார்.
அதற்கு அவர் நீலகிரியில் மேற்கொண்ட பிரசாரமே சான்று!
நீலகிரி தனி தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து நீலகிரி மாவட்டம் ஏடி.சி சந்திப்பு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அதிமுக., ஆட்சியின் சாதனைகள் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து, ஸ்டாலின் குறித்து காட்டமாகப் பேசினார். “அம்மா வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் ஆட்சியைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாத ஸ்டாலின் வேறு வழியில்லாமல் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களை வைத்து நாடகமாடுகிறார். கொடநாடு சம்பவம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
அந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர்கள் திமுக வழக்கறிஞர்கள். இந்தக் கொலை சம்பவத்தில் என்னைச் சிக்கவைக்க சதி செய்து, சயான், மனோஜ் என்ற இருவரை அழைத்து இந்த சம்பவத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேசுங்கள் என்றவர் ஸ்டாலின். இப்போது அந்த நபர்கள் இருவரும் ஓட்டலில் பேசிய வீடியோ வெளியாகி ஸ்டாலினின் குட்டு வெளிப்பட்டுவிட்டது.
அரசியல் ஆதாயத்துக்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் எங்கே சென்றாலும் என்னையும் அமைச்சர்களையும் பற்றி பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி மட்டுமே கொடுத்திருந்தார். கருணாநிதி இறந்த பின்னர் இவராகவே தலைவராகி விட்டார். கருணாதியிக்கு உடல்நலம் பாதித்தது முதல் ஸ்டாலின் அவரை வீட்டுச் சிறையிலேயே வைத்துவிட்டார்.
கருணாநிதிக்கு தொண்டைப் பிரச்னை மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளிக்காமல் விட்டது ஏன்?
ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப் பட்டதுபோல் ஏன் கருணாநிதிக்கு அளிக்கப்படவில்லை!?
ஸ்டாலின் நினைத்திருந்தால் கருணாநிதியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உயர்தர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால்… கருணாநிதி இறந்த பிறகு இவராகவே தலைவராகிவிட்டார்!
ஓட்டல்கள், செல்போன் கடைகளில் வன்முறையில் ஈடுபடுவது தி.மு.கதான், நாங்கள் இல்லை! ஒரு கூலிப்படை தலைவராகவே ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
கருணாநிதி உயிருடன் இருக்கும் போது ஸ்டாலினுக்கு ஏன் தலைவர் பதவி தரப்படவில்லை. அவர் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பது தானே காரணம்?! – என்று வெளுத்து வாங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, நீலகிரி கழக வேட்பாளர் திரு.எம்.தியாகராஜன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். #AIADMK #AIADMKMegaAlliance #Mission40 pic.twitter.com/cpiLgd0w3G
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 8, 2019