தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, 60 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் நாட்டிற்கு இழைத்துள்ள அநியாயங்களுக்கு யார் நியாயம் வழங்குவது என கேள்வி எழுப்பினார்.
தேனியில் அதிமுக-பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். தேனி, திண்டுக்கல், விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களையும், பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களையும் ஆதரித்து இன்று பிரசாரம் நடைபெற்றது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உரை நிகழ்த்திய பின்னர், மேடையில் தே.ஜ.கூட்டணி வேட்பாளர்கள் பிரதமரிடம் ஆசி பெற்றனர்.
பின்னர், தமிழில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்தார். ஜாலியன் வாலாபாக் தியாகிகளை நினைவு கூர்ந்த மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் புகழ்ந்துரைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்..
மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் வட்டியோடு சேர்த்து, வளர்ச்சித் திட்டங்களாக திருப்பித் தருவேன் என 2014இல் நான் கூறினேன். அதன்படி 5 ஆண்டுகளில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்வையிட வந்துள்ளேன்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களை திசைதிருப்ப முயற்சி செய்கிறது. நாட்டின் காவலாளியான நான் மக்களை அவர்கள் ஏமாற்ற அனுமதிக்கப் போவதில்லை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்ததை யாரும் ஏற்கவில்லை! ஆளாளுக்கு பிரதமர் கனவில் இருப்பதால் அந்தக் கூட்டணியில் உள்ளவர்களே ஏற்கவில்லை!
பொய்களையே பேசும் காங்கிரஸ் தன்னை மறந்து எப்போதாவது உண்மையைப் பேசி விடுகிறது! 60 ஆண்டுகளாக இந்த தேசத்திற்கு அநியாயம் இழைத்துள்ளதை அக்கட்சி ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனால் ஏதோ நியாய் திட்டம் என பேர் வைத்திருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1984ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், போபால் விஷவாயு கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யார் நியாயம் வழங்குவது? ஒரு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை காங்கிரஸ் கலைத்ததே அதற்கு யார் நியாயம் வழங்குவது?
தேசத்தின் காவலாளியாக மக்களின் நன்மைக்காக பணியாற்றி வருகிறேன். வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – நாளை நமதே, நாற்பதும் நமதே என்பது மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது!
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள் . ஏழைகளுக்காக வாழ்ந்த அந்த இருபெரும் தலைவர்களால் தேசம் பெருமை கொள்கிறது!
பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! நமது எதிராளிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கில் வைத்திருக்கிறேன் !
இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்; நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள நாம் தயாராக இல்லை !
நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன்! தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது! மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகன் பயனடைந்து வருகின்றனர்!
இது எம்ஜிஆர், ஜெயலலிதா தொகுதி, இவர்களின் மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் ஒன்றும் செய்ய முடியாது! – என்று பேசிய பிரதமர் மோடி, தேனி, மதுரை மாவட்டங்கள் தொடர்பான திட்டங்கள் மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பான திட்டங்களை பட்டியலிட்டார். தேனி தொகுதி வேட்பாளர் மண்ணின் மைந்தர், காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி வேட்பாளர் என்று கூறிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Speaking at a massive NDA rally in Theni, Tamil Nadu. Watch. https://t.co/dSZb85csC6
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 13, 2019