2019 நாடாளுமன்ற தேர்தலில் வரும் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் எபனேசருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று குமரியில் முகாமிடுகிறார். நாகராஜா கோவில் திடலில் மாலை 6 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று குமரி மாவட்டத்தில் சுற்று பயணம் செய்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர் சுசீந்திரம், ராமன்புதூர், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, ஊரம்பு, களியக்காவிளை, குழித்துறை, குலசேகரம், வேர்கிளம்பி, தக்கலை ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
பாஜக., வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று பேசுகிறார். இதற்காக குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார். குலசேகரம், களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்துப் பேசும் அவர், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துப் பிரசாரம் செய்கிறார்.