அண்மைக் காலமாக உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாதாரணமாக தேர்தல் என்றால் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம்
ஆனால் இந்த முறை அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க… அவருடைய மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தார்.
இருப்பினும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வதைத் தான் அவரது கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று கட்சி அறிவித்தது.
அதன்படி சென்னையில் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார்.
மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து வேனில் சென்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
பிரசார வேனில் வேட்பாளர்கள் நின்றபடி இருக்க, விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்திருந்தபடி வாக்கு சேகரித்தார்.
வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே தொடங்கிய பிரசாரக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னது போன்று, பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.’ என்று கூறி சில நொடிகளிலேயே தனது பேச்சை முடித்துக் கொண்டார். அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. பின் பொதுமக்களை பார்த்து கைகூப்பியபடி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பெரவள்ளூர் பகுதியில் பேசியபோது, “தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம். அவரை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல உள்ளம் படைத்தவர். எனவே அழகாபுரம் மோகன்ராஜூக்கு வாக்களியுங்கள்” என்றார்.
விஜயகாந்த் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தங்களுடைய வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். .
வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.