தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் அரசியலில் எதிரும் புதிருமான மாயாவதியும், முலாயம்சிங் யாதவும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில், உ.பி. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தத் தேர்தலில் கை கோத்தன. இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் திடீர் முடிவு எடுத்தார். இது முலாயம் சிங் யாதவுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
காங்கிரஸை கழற்றி விட்டு இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது உ.பி. அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது மகன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முலாயம், திடீரென மாயாவதியுடன் ஒரே மேடையில் தோன்றியுள்ளார்.
கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முலாயம் சிங் யாதவை வெகுவாகப் புகழ்ந்தார் மாயாவதி. பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உண்மையான தலைவர் முலாயம்சிங் என்று கூறினார் மாயாவதி.
அதே போல், பல வருடங்களுக்கு பின் மாயாவதியுடன் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தனது மகனுக்காக, தனது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் முலாயம்சிங் யாதவ்.