இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் பட்ட ஞாயிறு அன்று மிகப் பெரும் அளவில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 8 இடங்களில் தொடர்ந்து ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் 225 பேர் கொல்லப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் இந்த குண்டுவெடிப்புதான் மிகப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது. இதன் பின்னணியில் மத அடிப்படைவாதிகள் குழுக்கள் உள்ளன என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்ன நடந்துள்ள முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்….
கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் உயிர் இழந்தனர்.
1996 ஜூலை மாதம் மேற்கு மாகாணம் டெகிவாலா ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 64 பேர் உயிரிழந்தனர்.
அதே ஆண்டு தலைநகர் கொழும்பில் மத்திய வங்கியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 91 பேர் உயிரிழந்தனர்.
1998 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள புத்த ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.
2001 ஆம் ஆண்டு மேற்கு மாகாணம் பண்டாரநாயகா விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர்.
2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திக்கம்பத்னா குண்டுவெடிப்பு சம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
2008 ஆம் ஆண்டு பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 64 பேர் உயிரிழந்தனர்.
1980 -ஆம் ஆண்டு முதல் 2000 -ஆம் ஆண்டு வரை 198 தற்கொலை படை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, நேற்று மாலை முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது இலங்கை.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியது இலங்கை அரசு. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை அடுத்து போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிமுதல் திரும்பபெறப்பட்டதாக போலீசார் அறிவித்துள்ளனர்.