இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று குண்டு வெடிப்பு நிகழ்த்த சதி வேலைகள் நடந்து வருவதாக முன்கூட்டியே தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னதாக, நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு இதற்குக் காரணமாக இருப்பதாக இலங்கை பாதுகாப்புத் துறை கூறியது.
இதனிடையே, முந்தைய நாளான சனிக்கிழமை ஏப்.20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு குண்டு வெடிப்பு குறித்த எச்சரிக்கையை தமிழக உளவுத்துறை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தமிழக உளவுத் துறை எச்சரித்திருந்தது. தமிழக உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த மறுநாளே இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது என்றால், தமிழகத்தில் உள்ள மத அடிப்படைவாத அமைப்புகளுக்கும் தகவல் முன்கூட்டியே கசிந்திருக்கலாம், அல்லது அவர்களின் பங்களிப்பும் இதில் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.