விக்ரஹங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே என்று உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில் விக்ரஹங்களை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய – மாநில அரசுகள், தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக சிவன், விஷ்ணு, விநாயகர், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட விக்ரஹங்கள், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப் படுகிறது, இந்த விக்ரஹங்களை மீட்க மத்திய – மாநில அரசுகள் இணைந்த சிறப்பு கூட்டு மீட்பு குழுவை அமைக்க உத்தரவிடவேண்டும்” என்று கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக, மத்திய – மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் இதுவரை இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய கலாச்சார துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத் துறை, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக ஒரு வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உள்ள மயில் விக்ரஹ வழக்கில் 1300 ஆண்டு பழமையான விக்ரஹம் மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.
மேலும், கோடிக்கணக்கான ரூபாயை பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் நிலையில், விக்ரகங்களை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடி விடலாமே என்று வேதனை தெரிவித்தனர்.
திருமேனிநாதர் கோவில் விக்ரகம் மாயம் குறித்து விக்ரகங்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.