நக்கீரன் இதழின் அலுவலகத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்… அதுவும் இரவு பகலாக அச்சகத்தில் அதற்கான வேலைகள் நடக்கின்றன. அருகில் வசிப்போர் தூங்க முடியவில்லை! நிம்மதியாக அந்தப் பகுதியில் நடமாடவே அச்சப் படுகிறார்கள். மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து கூறியும், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று போலீசார் கையைப் பிசைகிறார்கள்… என்றெல்லாம் செய்திகளை நாங்களும் சொல்லலாமா? – என்று கேள்வி எழுப்புகின்றனர் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்!
மயிலாடுதுறையில் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் மற்றும் முகாம் மீது கல்வீசித் தாக்கிய ஆறு பேரை கைது செய்துள்ளது போலீஸ் என்பதுதான் இன்றைய செய்தி. இதற்கும் நக்கீரனுக்கும் என்ன தொடர்பு?!
முதலில் இன்றைய செய்தி: மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொறுப்பாளர் மீது கல் வீசி தாக்கிய சம்பவத்தில் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில் ஆர்எஸ்எஸ் சார்பில் பண்பு பயிற்சி முகாம் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை புதன்கிழமை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது! இதில் பாதுகாப்பு பணிக்காக ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த துரை சண்முகம் மாவட்ட பொறுப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
70 வயதான துரை சண்முகம் மீது நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்கி எரிந்தும் பயிற்சி மையத்தின் கதவுகளை திறக்க முயற்சி செய்தும் தரக்குறைவாக திட்டியும் சென்றுள்ளனர்! கற்கள் அவர் மீது வீசப்பட்டதில் துரை சண்முகம் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் பயிற்சி முகாம் நடைபெற்ற பள்ளிக்கூடம் முன்பு அதிகாலையில் நின்றவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து அடையாளம் கண்டு வடகரை பகுதியைச் சேர்ந்த ஜாசிக் (19 வயது), முகமது சபிக் (19 வயது), முகமது அல்பா (18 வயது), இஜாஸ் அகமது (18 வயது), முகமது இர்பான் (18 வயது), அப்துல் பாசிக் ரஹ்மான் (19 வயது) என ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
~ இது குறித்து மயிலாடுதுறை முகாமில் பங்குபெற்றுள்ள சிலருடம் நாம் பேசினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில், அதிர்ச்சியாக இருந்தது. காரணம், இவ்வாறு உணர்ச்சிகரமாகத் தூண்டப் பட்ட, வாழ்க்கையில் இப்போதுதான் அடி எடுத்து வைக்கும் பதின் பருவ அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை வன்முறைக்கு தூண்டிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளின் பக்கம் நகர்த்தும் மிக மோசமான செயலைச் செய்பவர்கள் யார்? அவர்களை இவ்வாறு தூண்டிவிடுவது யார்? என்று நம்மிடம் பதில் கேள்வி எழுப்பும் அவர்கள், ஒருபுறம் பயங்கரவாத இயக்கங்கள் என்றால், இன்னொரு புறம் நக்கீரன் போன்ற பயங்கரவாதத் தொடர்புள்ளவர்கள் பணி செய்யும் ஊடகங்களும் தான் என்கின்றனர்.
வருடம் தோறும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கோடைக்கால பண்புப் பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம். சுமார் 20 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், யோகா, மருத்துவம், விளையாட்டு, குழு விவாதம், பிராணாயாமப் பயிற்சி, தேச பக்திப் பாடல்கள், வல்லுநர்களின் ஆலோசனைகள், சொற்பொழிவுகள் ஆகியவை நடபெறுவது வழக்கம். வெளிப்படையாக திறந்த வெளியில் பலரும் அணுகும் வகையில் பயிற்சிகள் நடத்தப் படுகின்றன.
பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கீழ்ப் பகுதியில் உள்ள திறந்த வெளி அரங்கில் சொற்பொழிவுகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. மேல் தளத்தில் மாணவர்களின் சேர்க்கைக்காக பெற்றோர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பெற்றோர்களைப் போல் முகாம் நடத்தும் பள்ளிக்கு வந்த நக்கீரன் நிருபர், மேல் தளத்தில் நின்று போட்டோ வீடியோ எல்லாம் எடுத்துக் கொண்டு, அவராகவே இட்டுக் கட்டி கதைகளை எழுதியிருக்கிறார். அது நக்கீரனில் வெளிவந்துள்ளது என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
நக்கீரனில் வெளியான நூறு சதவீத பொய்களை மட்டுமே தாங்கிய இந்தக் கட்டுரைதான், இன்று ஆறு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் கல்லெறிதலுக்கும் வன்முறைக்கும் ஈடுபடுவதற்குக் காரணமாகவும், அதன் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுப்பதற்கும் காரணமாகவும் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
நக்கீரன் கூறுவது போல் என்றால், அரசு உதவி பெறும் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளையும் இதே போல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். காரணம், அங்கே தான் அரசியல் பிரசாரம், இவருக்கு ஓட்டு போடு அல்லது போடாதே என்று வெளிப்படையாக பாதிரிகளும் இமாம்களும் பேசுகிறார்கள்.
நக்கீரன் இதழே, அரசு மானியத்தில் அச்சுத்தாள் வாங்கித்தான் அச்சடிக்கப் படுகிறது. அதே அச்சுத்தாளில்தான் பணத்தை பெட்டி பெட்டியாய் வாங்கிக் கொண்டு, பொய்களை அள்ளித் தெளிக்கிறது என்று சுட்டிக் காட்டும் அவர்கள், காரணமே இல்லாமல் தேவையற்ற பீதியைக் கிளப்பிய நக்கீரன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருமுகிறார்கள்.
காரணம், இந்த ஆர்.எஸ்.எஸ்., பண்புப் பயிற்சி முகாம்களுக்கு முறையான காவல் துறை அனுமதி பெறப் படுகிறது. காவல் துறையின் உளவுப் பிரிவினர் எந்நேரமும் உடன் இருக்கிறார்கள். காவலர்களின் பாதுகாப்பு கொடுக்கப் படுகிறது. எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. இங்கே எந்த ரகசியங்களும் இல்லை. அப்படி ரகசியங்கள் இருந்திருந்தால், நக்கீரன் நிருபரால் எப்படி முகாமுக்குள் வர முடிந்தது?! போட்டோ வீடியோக்கள் எடுக்க முடிந்தது?! என்று கேள்வி எழுப்பும் அவர்கள், நக்கீரனில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்! எனவே நாங்களும் சொல்லலாமா?! நக்கீரன் அச்சகத்தில் கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்; அரசு அதிகாரிகளிடம் இருந்து செய்திகளைப் பெறுவதற்காக இரவு நேரத்தில் பலான தொழில் செய்பவர்களை அனுப்பி வைத்து பிளாக் மெயில் செய்கிறார்கள் என்று?! – என கோபத்துடன் கேட்கிறார்கள்!
இந்த முகாமுக்கு, ஆர்.எஸ்.எஸ்., (தமிழ்நாடு) சங்க சிக்ஷா வர்க (சிறப்பு) முதலாம் ஆண்டு, கோடைகால பயிற்சி முகாம் என்று பெயர். இங்கே, சேவா காரியங்ககள் என செய்கின்றோம். எந்த வகையில் எல்லாம் சமுதாய சேவை செய்வது, பேரிடர் காலங்களில் எப்படி உடனே களம் இறங்குவது, எவ்வாறு மக்களைக் காப்பாற்றுவது, உணவு உள்ளிட்டவை விநியோகம் செய்யும் போது எச்சரிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்தெல்லாம் விவாதிக்கிறோம்.
இந்த முகாமில் பொறுப்புள்ளவர்கள், பிரபலங்களும் வந்து கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தின் முதல் பாஜக., எம்.எல்.ஏ.,வான பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த வேலாயுதம் இந்த முகாமில் முழு நாட்களும் கலந்து கொண்டிருக்கிறார்.
அண்மைக் காலத்தில் நடந்த புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது, எங்களது உதவிப் பணிகள், சேவாகாரியங்கள் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, அவரவர் அனுபவங்கள், சந்தித்த இன்னல்கள், அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தெல்லாம் பேசுகிறோம். .மரக் கன்றுகள் நடுவது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, கோபூஜை செய்வது, பசுக்களை பராமரிப்பது, இருக்கும் இடத்தை தூய்மையாக பேணுவது, மூத்தவர்களுக்கு உதவிகள் செய்வது என்று எல்லோரும் வித்தியாசம் ஏதுமின்றி பயிற்சி பெறுகிறோம். அக்னிஹோத்ரம் என்பது குறித்து பயிற்சி கொடுக்கப் பட்டது.
யாகத்தில் தீ வளர்த்து மந்திரம் சொல்வது போன்று, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவரவர் அக்னிஹோத்ரம் செய்வதற்கான பயிற்சி திறந்த வெளியில் மைதானத்தில் கொடுக்கப் பட்டது.மாத்ரு போஜன் – அதாவது அம்மா கையால் சாப்பிடுவது என்று, முகாமில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு அம்மாக்களே உணவு பரிமாறும் நிகழ்ச்சியும் உண்டு. அனைவருக்கும் உணவு அளித்து, நாமே பரிமாறி நாமே அனைத்து வேலைகளையும் செய்து ஒரு சுயசார்புத் தன்மைப் பண்பை வளர்க்கிறோம்.
இங்கே நல்ல பண்புகளைத்தான் கற்றுத் தருகிறோமே தவிர, நக்கீரன் நிருபர் இட்டுக் கட்டிய கதைகளைப் போல், அடுத்தவரைத் தாக்கவோ, இன்னும் சொல்லப் போனால் வடிகட்டிய பொய்யான ‘இரவில் ஆயுதம் ஏந்தி தாக்குவது’ என்பதெல்லாம் நாங்கள் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை!
கபடி விளையாடுவது ஆயுதப் பயிற்சியில் வரும் என்று எழுதும் நிருபரும் அதை பதிப்பிக்கும் ஆசிரியரும் எத்தகைய அறிவாளிகள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இப்படி பீதியைக் கிளப்பி, ஒரு சமூகத்தைத் தூண்டுவிட்டு, இப்போது இஸ்லாமிய இளைஞர்கள் 6 பேர் கைதுக்குக் காரணமான நக்கீரனை அரசு ஏன் தடை செய்யக் கூடாது?! என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்த முகாமில் கலந்து கொண்டவர்கள்!
நாளை அதாவது மே 15ம் தேதி இந்த முகாம் நிறைவு பெறுகிறது. அதன் அழைப்பிதழும் தருகிறோம். இயன்றால் இதனை நாங்கள் சமூக வலைத்தளத்திலும் நேரடியாகப் போடுவோம்..பார்த்துக் கொள்ளட்டும்! – என்கிறார்கள்!
மேலும்… இந்த முகாம் படங்கள்: