வாக்குப் பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பான அறையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் 2 முறை தாழிடப்பட்டு சீலிடப்படுகிறது என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையம்.
மேலும், இந்த பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 24 மணி நேரமும் காவலுக்கு உள்ளனர் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சில இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபட முயற்சிகள்
நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளை சேர்ந்தவர்கள் பகிர்ந்த சில வீடியோக்களும்
சமூக வலைத்தளங்களில் பரவின.
இத்தகைய புகாரால், உத்தரப் பிரதேசத்தின் மாவ் நகரில், மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வளாகத்திற்கு வெளியே கூட்டம் திரண்டது. காசிப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்களை எடுத்துச் செல்ல முயற்சி நடைபெறுவதாகக் கூறி, பகுஜன்சமாஜ் வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டார்.
சந்தௌலி மக்களவை தொகுதியில், மின்னணு எந்திரங்கள் இறக்கி வைக்கப்படுவது போன்ற வீடியோ கிளிப் ஒன்று வெளியானது. தேர்தல் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு வாக்கு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டது ஏன் என்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சர்ச்சை எழுப்பினார்.
பீகாரில் மகராஜ்கஞ்ச் மற்றும் சரண் மக்களவை தொகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நகர்த்தப்படுவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உரிய விளக்கங்களுடன் மறுத்துவிட்டன.
இந்நிலையில், மின்னணு வாக்கு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவற்றை மாற்றவோ முறைகேடு செய்யவோ இயலாத அளவுக்கு கண்காணிப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.