― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழக வாக்காளர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்... சொன்ன பொய்கள்..!

தமிழக வாக்காளர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்… சொன்ன பொய்கள்..!

- Advertisement -

Stalin Rahul Gandhi Chennai

நாம் எதன் அடிப்படையில் வாக்களிக்கிறோம்? கூட்டாட்சி அமைப்பின் மிகவும் ஆதார அம்சமான மத்திய மாநில அரசுகளின் நல்லிணக்கம் என்ற அடிப்படையில்தான் நாம் எப்போதும் வாக்களித்து வந்திருக்கிறோம். அதாவது மத்தியில் எந்தக் கட்சி வெல்லும் என்ற தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்படுகிறதோ அதற்கு இசைவாகவே நாம் வாக்களித்துவந்திருக்கிறோம்.

1996 தேர்தல் – பாஜக 160 தொகுதிகள்
காங்கிரஸ் 140 தொகுதிகள்
கூட்டணி ஆட்சியின் தொடக்கம்.
தமிழகத்தில் திமுக 17
தமிழ் மாநில காங்கிரஸ் 20

நரசிம்மராவ் காங்கிரஸுக்கு எதிராக தேசம் வாக்களித்தது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகளும் அதே நரசிம்மராவ் காங்கிரஸுக்கு எதிராகவே களம் கண்டு ரஜினியின் ஆதரவுடன் வெற்றி பெற்றன.

பாஜக அமைத்த அரசு அதி விரைவிலேயே கவிழ்ந்துவிட தேவ கவுடா தலைமையில் பாஜக அல்லாத ஆட்சி என்ற கோஷத்துடன் ஒரு அரசு அமைந்தது. தமிழகப் பிரதிநிதிகளும் அதை ஆதரித்தனர்.

1998
பாஜக 182
அதிமுக 18
திமுக 6
பாமக 4
தமக 3

இந்தத் தேர்தலில் தேசம் பாஜகவுக்கே அதிக இடங்களைக்கொடுத்தது. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக 18 இடங்களை வென்றது.
இந்து கட்சியான பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த அதிமுகவுக்கே தமிழக மக்கள் பெருமளவில் வாக்களித்தனர்.

1999 தேர்தல்
பாஜக (182) கூட்டணி 270 (தெலுங்கு தேசம் 29)
காங்கிரஸ் 114
திமுக 12. பாமக 5
அதிமுக 10

இம்முறை பாஜவுடன் கூட்டணியில் திமுக, பாமக இருந்தன. இந்துக் கட்சி தமிழகத்தில் பெற்ற வெற்றிக்கு அப்போது உறுதுணையாக இருந்தது திமுகவே.
தேசம் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழகமும் அவ்வண்ணமே செய்தது.

2004 தேர்தல்
காங்கிரஸ் 145
பாஜக 138
திமுக 16
பாமக 6
மறுமலர்ச்சி 4

இம்முறை சோனியாவை பிரதமராக முன்னிறுத்தி காங்கிரஸ் களம் கண்டது. இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் முழக்கத்தை மக்கள் ஏற்கவில்லை. தேசம் எப்படி வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்ததோ அதே போலவே தேசத்தின் ஓர் அங்கமான தமிழகமும் வாஜ்பாய்க்கு எதிராகவே வாக்களித்தது.

குஜராத் கலவரத்தை ஊடகங்களின் செல்வாக்குடன் மிகைப்படுத்தி காங்கிரஸ் செய்த பிரசாரம் கிறிஸ்தவ இஸ்லாமிய சக்திகளை இந்திய கூட்டு மனநிலையில் இருந்து பிரித்து வல்லாதிக்க மத வாக்கு வங்கியை உருவாக்கியது. அதைவிட மிதவாத எண்ணம் கொண்ட ஹிந்துக்களிடையேவும் அந்த மிகை வெறுப்புப் பிரசாரம் பெரிதும்செல்லுபடியானது.

குஜராத் மக்களுக்கு மட்டுமே புரிந்த உண்மைகள் தேசம் முழுவதற்கும் புரிய பத்தாண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில், இந்திய மனநிலையை அடியொற்றியே தமிழக மனநிலையும் இருந்தது.

2009
காங்கிரஸ் 206
திமுக 18
பாஜக 116
அதிமுக 9

இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பு மனநிலையே தேசத்திலும் அதனால் தமிழகத்திலும் நிலவியது.

2014
பாஜக 282
காங்கிரஸ் 44
திமுக 0
அதிமுக 36

இந்தத் தேர்தலில் தேசம் நரேந்திர மோதி மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுகள் பொய் என்பதை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாக்களித்தது. தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லையே தவிர பாஜகவின் இயல்பான கூட்டாளியாக வெகுளியாக தாம் நம்பிய ஜெயலலிதாவுக்கே வாக்களித்தன.

இதை இந்துத்துவத்துக்கு எதிரான என்றோ தேச மன நிலைக்கோ முற்றிலும் மாறான என்றோ நிச்சயம் சொல்லமுடியாது. மத்திய அரசுடன் நட்புறவுடனும் தேவைப்படும்போது கறாராகவும் நடந்துகொண்டு தமிழக நலனைக் காக்கமுடிந்த ஆளுமையாக ஜெயலலிதாவை மக்கள் நம்பியதே காரணம்.

2019
பாஜக 303
காங்கிரஸ் 55
திமுக 23
அதிமுக 2

மேலே சொல்லப்பட்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழகம் எப்படி வாக்களிக்கிறது என்பது தொடர்பாக நாம் என்ன முடிவுக்கு வரமுடியுமென்றால், மத்தியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொதுவெளியில் வலுவான கதையாடல்கள் உருவாக்கப்படுகின்றனவோ அதற்கு ஏற்பவே தமிழகம் வாக்களித்திருக்கிறது.

மத்திய அரசும் மாநில அரசும் நட்புறவுடன் இருந்தால்தான் மாநிலத்துக்கும் நல்லது; தேசத்துக்கும் நல்லது என்ற எளிய, நேர்மையான, அழுத்தமான நம்பிக்கையே தமிழக வாக்காளர்களை இயக்கிவந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

அதனால்தான் 1999-ல் பாஜக-திமுக என்ற முற்றிலும் முரண்பாடான கூட்டு அமைந்தபோதும் அந்தக் கூட்டணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
நாளையே பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்று சேர்ந்து களம் கண்டால் மக்கள் அவர்களை அமோக வெற்றி பெற வைப்பார்கள். திராவிடக் கட்சிகளை வட மாவட்டங்களில் இருந்து துடைத்தழித்துவிடுவார்கள். அந்தவகையில் தமிழக மக்கள் மிக அருமையான ஒரே செய்தியையே ஒவ்வொரு தேர்தலிலும் தெரிவித்து வருகிறோம்.

இந்தத் தேர்தலிலும் அதேதான் நடந்திருக்கிறது. ஆனால், தேசம் பாஜக பக்கம் அணி திரண்டிருக்கிறது. தமிழகம் பாஜகவின் எதிர் பக்கம் நின்றிருக்கிறது.

முதல் முறையாக இந்தப் பிழை எப்படி நடந்தது..?

ஆட்சியில் இருப்பவர் மீதான அதிருப்தி வழக்கம் போல் இந்தத் தேர்தலிலும் முக்கிய பங்காற்றும் என்று தமிழக மக்கள் நம்பிவிட்டோம்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் ராகுல் தான் பிரதமர் என்று ஸ்டாலின் சொன்னது தமிழக மக்களின் மனதில் காங்கிரஸே வெல்லும் என்ற நம்பிக்கையை உருவாக்கிவிட்டிருக்கிறது. எனவே அந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சி தான் தமிழக நலனைப் பாதுகாக்க முடியும் என்ற இயல்பான நம்பிக்கையின்படி வாக்களித்துவிட்டோம்.

ஒருவேளை வட மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பிறகு தென் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ஆந்திராவும் கேரளாவும் பாஜகவுக்கு வாக்களிக்குமா என்று சொல்லமுடியாது. ஆனால், தமிழகம் நிச்சயம் பாஜகவுக்கே அவர்கள் தனித்து நின்றாலும் அமோக வெற்றியைத் தந்திருக்கும்.

நம் மனநிலை மிகவும் எளிது: பலப்படுத்தி பலம் பெறு. கூட்டுறவே நம் ஆதார சிந்தனை. அதைத்தான் கலக குணம் என்று திரிக்கிறார்கள் இன்றைய அரசியல் விதூஷகர்கள். இது முளையிலேயே கிள்ளப்படவேண்டிய முட் செடியும் கூட.

பாஜக தரப்பில் செய்த தவறுகளும் இந்த தேர்தல் முடிவுக்கு முக்கிய காரணமே.

கேஸ் அடுப்பு, கழிவறை போன்ற ஒரு தலைமுறைக்கு முன்பே தமிழகத்தில் கிடைத்துவிட்ட வளர்ச்சி அம்சங்களை பாஜக நீட்டி முழக்கி பிரசாரம் செய்தபோது நம்மால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

தொழில்வளர்ச்சிபெற்ற நம் மாநிலத்தில் ஜி.எஸ்.டி., பண மதிப்பு நீக்கம், டிஜிடலைசேஷன் போன்றவை கணிசமான அதிருப்தியையே ஏற்படுத்தியிருந்தன.

எப்போதும் இலவசங்கள், வாக்குக்குப் பணம், முறைகேடான வணிகம் போன்றவற்றுக்குப் பழகிவிட்டிருந்த பொது மனம் தேசத்துக்காக கொஞ்ச நேரம் க்யூவில் காத்திரு என்று சொன்னதை ஏற்கவில்லை.

அரசியல்வாதிகள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதை நம் அனுபவம் சார்ந்து கண்கூடாகக் கண்டுவரும் நமக்கு ஒரு அரசியல் தலைவர் வந்து கொஞ்சம் தியாகம் செய்யுங்கள் என்று சொன்னபோது அவர் மேல் கோபமே வந்திருக்கிறது.

இவையெல்லாவற்றையும்விட வளர்ச்சி அடைந்த மாநிலத்துக்கு என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்பது பாஜகவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழர் அடையாளம், கலாசாரத்துக்கு பாஜகவால் ஆபத்து என்ற போலி, மிகைப் பிரசாரத்தை பாஜக முறையாக எதிர்கொள்ளவே இல்லை.

அனிதாவைக் கொன்றுவிட்டார்கள் என்ற வெறுப்புப் பிரசாரத்துக்கு பதிலாக அவருடைய ஊரில் அடுத்த தெருவில் இருந்து படித்த ஏழைப் பெண்ணுக்கு அவர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஒரு காசு கொடுக்காமல் மருத்துவ சீட் கிடைத்ததைச் சொல்லிக் காட்டவில்லை.

தமிழகம் பாலைவனமாகிவிட்டது என்ற மிகை பிரசாரத்துக்கு பதிலாக தமிழகம் இந்த வருடமும் உனவு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது என்ற உண்மையை ஒருவர் கூட எடுத்துச் சொல்லியிருக்கவில்லை.

விவசாயத்தோடு நிறுத்தாமல் தொழில்மயமானதைத் தொடர்ந்தே தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் என தொழிற்சாலைகள் எல்லாம் பல வருடங்களாக இங்கு எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்லபடியாக இயங்குகிறது என்பதை எடுத்துச் சொல்லவில்லை.

ஸ்டெர்லைட்டில் கறுப்பு பேண்ட் மஞ்சள் டீஷர் போட்ட நபர் போலி துப்பாக்கியுடன் மேலே ஏறி நின்று ஷோ காட்டியதும் 13 சமூக விரோதிகளை அவர்களுடைய இருப்பிடத்தில் சென்று கைது செய்திருக்காமல் பொதுமக்கள் போர்வையில் அவர்கள் ஒளிந்து நின்றபோது சுட்டுக் கொன்றது தமிழக மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.

ஆனால், இதைச் செய்த மாநில அரசின் மீது மக்கள் கோபம் திரும்பவில்லை. காரணம் எதிர்கட்சிகள் ஏற்கெனவே அந்த மாநில அரசைப் பின்னின்று இயக்குவது மத்திய அரசே என்ற பொய்யை வலுவாக மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தனர். இதைக் கையாள பாஜகவுக்கு முடிந்திருக்கவில்லை.

ஒருவகையில் இந்தத் தேர்தலில் அதிமுக மிகத் தெளிவாக ஒரு வேலை பார்த்திருக்கிறது. பாஜகவை பலம் பெற விடக்கூடாது. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்கவும் வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் பாஜக மீதான வெறுப்புப் பிரசாரத்தை திமுக முன்னெடுக்கும். அதிமுக அதற்கு மறைமுகமாக உதவும். இதை பாஜக எப்படி எதிர்கொள்ளும் என்பது தெரியவில்லை. அல்லது ஊரறிந்த விஷயம்தான்.

இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் பலரும் சொல்வதுபோல் நாம் மட்டுமே பாஜகவுக்கு எதிராக நிற்கவில்லை. கேரளம், ஆந்திரா, சிக்கிம் போன்ற மாநிலங்களிலும் ஒருவகையில் ஒரிஸ்ஸாவிலும் கூட பாஜகவுக்கு மாற்றான மனநிலையிலேயே மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். எனவே ஈ.வெ.ரா. மண்ணுடோய் என்று பேந்தப் பேந்தமுழிக்கும் அவரை முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி இப்ப அடிடா பார்ப்போம் என்று மேலும் இழிவுபடுத்தவேண்டாம்.

ஆந்திரா, கேரளா, தமிழகம் இந்த மூன்றும் இந்துப் பக்திப் பாரம்பரியத்தின் மிகப் பெரிய கேந்திரங்கள். இந்து நம்பிக்கையை இந்து அரசியல் நலன்களை பாஜக மட்டுமே காப்பாற்றும் என்று இந்த மாநிலத்தினர் நம்பவில்லை. பாஜகவின் மாற்று சக்திகளும் கூட இந்துக்களை அனுசரித்துத்தான் நடந்துகொள்வார்கள் என்று நம்பியிருக்கிறார்கள்.

அதாவது இந்து வாக்கு வங்கியாக அணி திரளும் அளவுக்கு இந்து நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் நம்பியிருக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

அல்லது பாஜகவும் பெரிதாக இந்து நலன்களை அப்படியொன்றும் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஏனென்றால் தனிப் பெரும்பான்மை பெற்ற இந்த ஐந்தாண்டு ஆட்சியிலும் பாஜக இந்து நலன் என்று எதையும் தனியாகச் செய்திருக்கவில்லை.

பொருளாதார வளர்ச்சி சார்ந்த பாஜகவின் செயல் திட்டங்கள் எல்லாமே எந்தவொரு கிறிஸ்தவ பிரதமராலும் செய்திருக்க முடிந்தவையே.

இந்த இடத்தில்தான் வளர்ச்சி அடைந்த மாநிலத்துக்கான வியூகத்தை வகுக்க பாஜக தவறிவிட்டிருக்கிறது.

தமிழ் தேசியவாதிகள் மிக அழகாக தமிழர் அடையாளம் என்ற ஒன்றை முன்னிறுத்தியதோடு அதற்கு பாஜக எதிராக நிற்கிறது என்ற கதையாடலையும் வெகு அழுத்தமாக முன்னெடுத்துவிட்டிருக்கிறார்கள்.

பாஜக வட மாநிலங்களில் செல்வாக்கு பெற அடித்தளமாக இருந்தது ராமர் கோவில் சார்ந்த கலாசார மீட்டெடுப்பு முயற்சிகளே. எனவே பாஜக தமிழகத்திலும் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களின் கூடவே கலாசார மீட்டெடுப்பையும் முன்வைக்கவேண்டும்.

இப்போது தமிழர் அடையாளம் என்பதை கிறிஸ்தவ-இஸ்லாமிய சக்திகள் வெகு தீவிரமாக முன்னெடுத்துவிட்டிருக்கிறார்கள். தமிழர் அடையாளம் என்பது அடிப்படையில் இந்து-இந்திய விரோதம் என்பதாகவே இங்கு வடிவமைக்கப்படுகிறது.

வளர்ச்சியை இந்து அரசாங்கம் பார்த்துக்கொள்ளட்டும்; நாம் நம் பிரிவினை அரசியலை முன்னெடுப்போம் என்று தெளிவாகத் திட்டமிட்டு அவர்கள் செயல்படுகிறர்கள்.

திருமாவளவனெல்லாம் பறையர் ஜாதியினரின் நலனை இந்த தேசம் பார்த்துக் கொள்ளும்; நாம் இந்து எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்வோம் என்று முடிவு செய்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.

எனவே தமிழ் இந்து என்ற அடையாளத்தை பலப்படுத்தி அதனூடாக தமிழ்-இந்திய ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் வியூகம் வகுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர்கள் மீது ஒருவகையில் பெரிதாக எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தமிழகத்துக்கான வியூகத்தைத் தனியாக வகுத்தவர்கள் அல்ல. அதோடு அவர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள். பிரச்னை அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட வியூகத்தில்தான் இருக்கிறது. எனவே அதைத்தான் மாற்றவேண்டும். தலைவர்களை அல்ல.

வியூக மாற்றம் அதிக பலன் தரவேண்டுமென்றால் தலைமை மாற்றம் என்ற தெளிவான சமிக்ஞையும் கிடைத்தால் நல்லதுதான். ஆனால், இன்றைய தலைவர்களை ஓரங்கட்டியோ விமர்சித்தோ அந்த மாற்றம் இருக்கக்கூடாது. முன்னோர்களை மதித்து அவர்க்ளுடைய ஆசியுடன் நடப்பதாகவே இருக்கவேண்டும்.

வளர்ச்சி + கலாசார மீட்டெடுப்பு என்ற கோணத்தில் செய்யப்படவேண்டியவை என்னென்ன?

• கூவத்தை நன்னீர் ஆறாக மாற்றவேண்டும். தமிழகத்தின் ராமர் கோவில் இயக்கமாக அது முன்னெடுக்கப்படவேண்டும். அதன் கரைகளில் இருக்கும் கோவில்கள் அனைத்தின் புஷ்கரணி விழாவும் ஆரத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படவேண்டும்.

• பண்ணையார்கள் நடத்தும் விவசாயிகள் சங்கத்துக்குப் போட்டியாக விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட விவசாய சங்கத்தை உருவாக்கவேண்டும்.

• விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு அறநிலையத் துறை சார்பில் இருக்கும் கோவில்களின் நிலங்களைப் பகிர்ந்துகொடுக்கவேண்டும். கூட்டுறவு முறையில் 50 ஏக்கர்- 100 ஏக்கர் என ஒருங்கிணைந்த விவசாயமாக முன்னெடுக்கவேண்டும். இவர்களுக்கு மட்டுமே மானியங்கள்… இலவசங்கள்… பண்ணையார்களுக்கு அல்ல என்று செய்துகாட்டவேண்டும்.

• அறுபடை வீடுகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு யாத்திரை மானியம்.

• அமர்நாத் யாத்திரை அல்லது கங்கை ஆரத்தி, பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் போன்ற ஏதேனுமொரு பெரும் நிகழ்வுக்கும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு சென்றுவர ஆண்டுதோறும் மானியம்.

• கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது. பக்தர்களின், தர்மகர்த்தாக்களின் கைக்கு வந்தாகவேண்டும்.

• குளம், ஏரி போன்ற நீர்நிலைகளை மீட்டெடுத்தல், ஊரெங்கும் மரம் வளர்த்தல் போன்றவை கோவில்களின் முக்கிய பணியாக இருக்கவேண்டும்.

• பிரிட்டிஷ் கால அடிமைத்தன அடையாளங்கள் துடைத்தெறியப்படவேண்டும். ஜார்ஜ் கோட்டை என்பது திருவள்ளுவர் மண்டபமாகவேண்டும். கன்னிமாரா நூலகம் என்பது கலைவாணிநூலகமாகவேண்டும். செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் என்பதுபோன்ற வேடிக்கைச் செயல்பாடுகள் பத்தாது.

• சல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறுபவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய நெற்றித் திலகங்கள் அணிந்து பங்குபெறவேண்டும்.

• அரசுப் பள்ளிகளில் தமிழ் இந்து பெருமிதங்களைக் கொண்டு செல்லவேண்டும். அந்தப் பள்ளிகளில் கம்பராமாயண, பெரிய புராண வகுப்புகள், ஸ்கூல் ப்ராஜெக்ட்களாகவும் சிறப்பு வகுப்புகளாகவும் தமிழர்தம் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் கோவில் கட்டடக்கலை கற்பிக்கப்படவேண்டும்.

  • கட்டுரை: பி.ஆர். மகாதேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version