தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பணி நிமித்தம் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
பருவ மழை ஏமாற்றம் ஒருபுறம், நீர்நிலைகள் வறட்சி மறுபுறம் என மாறி மாறி சென்னை மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாமானிய மக்கள் தொடங்கி பல்துறை நிறுவனங்கள் வரை இந்த தண்ணீர் பஞ்சம் பிடித்தாட்டுகிறது.
தற்போது சென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் என பலவும் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் விடுதிகளை மூடும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக பலரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது, நிலத்தடி நீரை மட்டும் நம்பி உள்ளது சென்னை. 24 மணி நேரமும் மோட்டார் ஓடிக்கொண்டே இருக்கும். 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மெட்ரோ வாட்டர் கிடைக்கும். தற்பொழுது அந்த நீரும் சரியாக வருவதில்லை.
தங்கும் விடுதிகளில் குடிப்பதற்கு முழுமையாகவே மினரல் வாட்டரை தான் பயன்படுத்துகிறார்களாம். சில விடுதிகளில் 2 நாளைக்கு ஒருமுறை 20 கேன்கள் வாங்குவதாகவும், மாதத்திற்கு சராசரியாக 25,000 முதல் 30,000 வரை குடிநீருக்கே செலவழிப்பதாகவும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தண்ணீர் பஞ்சாத்தால் தங்கும் விடுதிகளைக் காலி செய்து கொண்டு வேறு இடங்களுக்கு சிலர் நகர்கிறார்கள். 250 அடி ஆழ போரில் முன்பு இருந்த அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. புதிதாக விடுதிகளில் தங்க வருவோரிடமும் தண்ணீர் பஞ்சம் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி பிறகுதான் விடுதிகளில் தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள்.
தற்போது, அறைகளுக்கு நேரடியாக தண்ணீர் கொடுப்பதில்லை. ஒரு குழாயில் வரும் தண்ணீரைதான் வாளிகளில் பிடித்துக் கொண்டு போய் பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னையால் பலர் விடுதிகளை காலி செய்துவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். தண்ணீருக்காக ஒரு நாளைக்கு 4000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். ஒரு லாரி தண்ணீர் 3500 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது என்கிறார்கள் சென்னைவாசிகள்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம். இதற்கு பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தண்ணீர் சிக்கனத்தின் ஒரு பகுதியாக தரைக்கீழ்த் தளத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும், இதன்மூலம் குளிர்சாதன அமைப்புகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குடிநீர்த் தேவை உள்ளிட்ட பயன்பாடுகளுக்குத் திருப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காற்றோட்ட வசதியும், ஆக்சிஜன் அளவும் முறையாகப் பராமரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பயணிகள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய நிலை தொடர்ந்தால், சென்னைக்கு பிழைப்பு தேடி வருவோர் மிகவும் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சென்னைவாசிகள்!