‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார் இசைஞானி இளையராஜா. இதனால் இளையராஜா-எஸ்.பி.பி. இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜாவின் பிறந்தநாள் வரும் ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் நடைபெற இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி மட்டுமல்லாது யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட இருக்கின்றனர்.
ராயல்டி பிரச்னையைக் காரணம் காட்டி, பேசாமலேயே இருந்து வந்த இளையராஜாவும் எஸ்பிபியும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் தோன்றவுள்ளனர். இது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .